இயேசுவின் எல்லையில்லா அன்பு

வரிதண்டுவோரும், பாவிகளும் இயேசுவை நெருங்கிவந்தனர். ஆனால், பரிசேயரோ இயேசு சொல்வதைக் கேட்டு முணுமுணுத்தனர். இந்த முதல் இறைவார்த்தையே இருவேறான மக்களின் மனநிலையைப் படம் பிடித்துக்காட்டுகிறது. இயேசுவை நோக்கி எதற்காக பாவிகள் நெருங்கி வர வேண்டும்? பாவிகள், ஏழைகள், வரிதண்டுவோர் தங்களது வாழ்க்கை முடிந்துவிட்டதாகக் கருதினர். தாங்கள் கடவுளால் ஏற்கெனவே தீர்ப்பிடப்பட்டதாகக் கருதினர். தங்களுக்கு இனிமேல் வாழ்வு இல்லை என்று நினைத்தனர். ஆனால், இயேசுவின் வார்த்தைகள் அவர்களுக்கு ஆறுதலாக இருந்தது. தங்களுக்கும் வாழ்க்கை இருக்கிறது என்ற நம்பிக்கையை அவை விதைத்தன.

மற்றொருபக்கத்தில் பரிசேயர்களோ, தாங்கள் ஏற்கெனவே கடவுளின் அரசுக்கு தகுதிபெற்று விட்டதாக எண்ணிக்கொண்டிருந்தனர். தாங்கள் மட்டும் தான், கடவுளுக்கு நெருக்கமானவர்கள் என்று நினைத்தனர். ஏழைகளையும், பாவிகளையும் வாழ்வை இழந்துவிட்டதாகப் போதித்துக்கொண்டிருந்தனர். அவர்களது போதனை இப்போது, இயேசுவின் போதனையால் வெல்லப்பட்டு விட்டது. அது மட்டுமல்ல, அவர்களுக்கே அவர்களது வாழ்க்கை கேள்விக்குறியாக்கப்பட்டு விட்டது. இதுவரை தங்களிடம் பணிந்து நின்றவர்கள், இப்போது இவர்களைப் பார்த்து பரிகாசிக்க தொடங்கியவுடன், அவர்களது கோபம் அதிகமாகிவிட்டது. அந்த கோபத்தின் தொடக்கம் தான் முணுமுணுப்பு. கோபத்தின் உச்சகட்டம், இயேவிற்கு எதிராக சதித்திட்டம்.

இயேசு நம் அனைவருக்கும் வாழ்வு தருவதற்காக வந்திருக்கிறார். நம்மை கடவுளோடு சேர்ப்பதற்கு வந்திருக்கிறார். அவருடைய ஆறுதலும், ஆசீரும் நமக்கு எந்நாளும் தேவையாக இருக்கிறது. ஒருபோதும் அவரை விட்டு பிரியாமல், எந்நாளும் அவரது பிள்ளைகளாக வாழ்வதற்கு கடவுளின் அருள் வேண்டுவோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.