இயேசுவின் சாட்சிகளாய் வாழ்வோம்

‘நீர்தான் கடவுளின் மகன் என்பதற்கு என்ன சான்று தருகிறீர்?’ என்று தன்னை மற்றவர்கள் கேட்டதற்கு, இயேசு இன்றைய நற்செய்தியில் பதில் தருகிறார். யூதர்களைப்பொறுத்தவரையில் உண்மை என்று நம்புவதற்கு இரண்டு சாட்சிகள் கட்டாயம் வேண்டும். ஒருவர் தனக்குத்தானே சான்று கூறுவதை, அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இணைச்சட்டம் 17: 6 “இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் வாக்குமூலத்தை முன்னிட்டே, குற்றவாளி கொலை செய்யப்பட வேண்டும்”. இணைச்சட்டம் 19: 15 “ஒருவனது எந்தக்குற்றத்தையும் எந்தப்பழிபாவச்செயலையும் உறுதிசெய்ய, ஒரே சாட்சியின் வாக்குமூலம் போதாது. இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் வாக்குமூலத்தாலே அது உறுதி செய்யப்பட வேண்டும்.” இயேசு இந்த ஒழுங்குமுறையின்படி சான்றுகளைத்தருகிறார்.

இயேசுவின் முதல் சான்று திருமுழுக்கு யோவான்(33) இயேசுவின் இரண்டாவது சான்று தந்தையாகிய கடவுள்(37)மூன்றாவது சான்று மறைநூல். ஆனால், இந்த சான்றுகளையெல்லாம் விட இயேசு அதிக அழுத்தம் கொடுத்து கூறுவது, அவரின் செயல்கள்(36). தனது செயல்களை விட வேறு என்ன பெரிய சான்றை தான் கொடுத்தவிட முடியும்? என்பது இயேசு நேரடியாகச்சொல்லாமல் சொல்கிற செய்தியாக இருக்கிறது. இயேசு செய்த ஒவ்வொரு புதுமைகளும், போதனைகளும், விளக்கங்களும் இயேசு எத்தகையவர் என்பதை உறுதியாக நமக்குக்கூறும் சான்றுகளாகும். தான் கடவுளின் மகன் என்பதற்கும், தான் கடவுளிடம் இருந்துதான் வந்திருக்கிறேன் என்பதற்கும், தான் செய்கின்ற செயல்களைச் சான்றாக இயேசு சொல்கிறார்.

ஒருவரின் செயல்பாடுகளைக்கொண்டே ஒருவர் எப்படிப்பட்டவர் என்பதை நாம் அறிய வருகிறோம். நான் உண்மையிலே திருமுழுக்குப் பெற்ற கிறிஸ்தவன் என்பதை நான் வைத்திருக்கிற திருமுழுக்குச்சான்றிதழை வைத்து அல்ல, என்னுடைய செயல்பாடுகளை அடிப்படையாக வைத்து மற்றவர்கள் அறியவேண்டும். இயேசுவின் செயல்கள் அனைத்தும் அவர் கடவுளிடமிருந்து வந்திருக்கிறவர் என்பதை அனைவருக்கும் அறியவைத்தது போல, நம்முடைய அன்றாட வாழ்வில் நாம் செய்யும் செயல்கள் நாம் ‘கிறிஸ்தவர்கள்’ என்பதை மற்றவருக்கு அடையாளம் காட்ட வேண்டும். அப்படிப்பட்ட வாழ்வு வாழ முயல்வோம்.

~ அருட்பணி. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.