இயேசுவின் பரந்த மனம்

இயேசுவின் இன்றைய வார்த்தைகள், யூதர்களின் நம்பிக்கை பற்றிய பார்வையை அடியோடு புரட்டிப்போடுகின்ற வார்த்தைகள். நூற்றுவர் தலைவன், தனது பையனை குணப்படுத்த இயேசுவின் உதவியை நாடுகிறார். அதில் உள்ள பிரச்சனையும் அவருக்குத் தெரியும். யூதச்சட்டப்படி, ஒரு யூதர் புற இனத்தவரின் வீட்டிற்குச் செல்லக்கூடாது. புறவினத்தார் வாழக்கூடிய பகுதிகள், யூதர்களின் பார்வையில் தூய்மையற்றவை. இயேசு ஒரு யூதர். நூற்றுவர் தலைவன் ஒரு புற இனத்தவர். இந்த சிக்கல் இரண்டு பேருக்குமே தெரியும். அப்படியிருந்தும், இயேசு ”நான் வந்து அவனைக் குணப்படுத்துவேன்” என்று சொல்கிறார். இயேசு தெரியாமல் சொல்லவில்லை. மாறாக, மற்றவர்களின் பதிலை, எதிர்வினையை எதிர்பார்த்துச் சொல்கிறார்.

இங்கே தான், நூற்றுவர் தலைவனின் ஆழ்ந்த விசுவாசம் வெளிப்படுகிறது. அந்த விசுவாசத்தை பாராட்டும் இயேசு, அடுத்த ஒரு இடி போன்ற செய்தியை அறிவிக்கிறார். அதாவது, ”கிழக்கிலும், மேற்கிலுமிருந்து பலர் வந்து, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் விண்ணரசின் பந்தியில் அமர்வர்” என்பதுதான் அந்த செய்தி. மெசியா வருகிறபோது, செய்யப்படுகிற விருந்தில், புற இனத்தவர்க்கு இடமே கிடையாது, என்ற நம்பிக்கையில் இருந்த யூதர்களுக்கு, இந்த செய்தி உண்மையிலே கடுமையான செய்திதான். ”உனக்கு பணிபுரியாத வேற்றுநாடோ, அரசோ அழிந்துவிடும்” (எசாயா 60: 12) என்று புறவினத்தாரைப்பற்றி வைத்திருந்த ஒரு பார்வையை, இயேசு முற்றிலும் மாற்றிக் கொடுக்கிறபோது, அது நிச்சயம் யூதர்களுக்கு மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கக்கூடும்.

இயேசுவின் எண்ணம் பரந்துபட்ட எண்ணம். அது அடிமைத்தளைகளை உடைத்தெறிகிற எண்ணம். அனைவரையும் ஏற்றுக்கொள்ளக்கூடிய எண்ணம். இந்த உலகத்தில் இருக்கிற அனைத்து மக்களையும், கடவுளின் பிள்ளைகளாகப் பார்க்கக்கூடிய எண்ணம். அதனையே நாமும், நமது வாழ்வில் கொண்டிருப்போம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.