இயேசுவின் மகிழ்ச்சியான வாழ்வு

முப்பது ஆண்டு காலம் தனது பெற்றோருடன் மகிழ்ச்சியாக, கீழ்ப்படிதலோடு வாழ்ந்த இயேசு தனது பணிவாழ்வைத் தொடங்குகிறார். சாதாரண மக்களில் ஒருவராக வாழ்ந்த இயேசு, இனி தன்னை அடையாளப்படுத்தக் கொள்ள வேண்டிய நேரம் வந்ததும், அதற்கு தன்னையே தயார்படுத்துகிறார். இதுவரை அவரது வாழ்க்கையில், கவலை ஒன்றும் இல்லை. தனது தாயோடு, தாய்க்கு நல்ல மகனாக, வாழ்வின் இனிமையை உணர்ந்து, பூரிப்போடு இருக்கிறார். வாழ்க்கை இப்படிப்போனால், அது நன்றாகத்தான் இருந்திருக்கும். ஆனால், இயேசு அதற்காக வரவில்லை. அதையும் தாண்டிச்செல்லக்கூடிய பயணம் தான் அவரது வாழ்க்கை. அதற்காகத்தான் அவர் வந்திருக்கிறார்.

தனது நேரம் வருமளவும் பொறுமையோடு, பணிவோடு காத்திருக்கிறர். நேரம் வந்ததும், அதற்கான முழுவீச்சில் தனது பணியை ஆரம்பிக்கிறார். முப்பது ஆண்டுகள் தனது குடும்பத்தோடு வாழ்கிறபோது, அதை மகிழ்வோடு நிறைவோடு வாழ்கிறார். மூன்று ஆண்டு காலம் பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு, வாழ்ந்தபோதும் மகிழ்ச்சியாக வாழ்கிறார். ஆக, எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தாலும், மகிழ்வோடு வாழ்கிறார்.

இன்றைய நமது வாழ்க்கை எதிலும் நிறைவில்லாமல் இருக்கிறது. குருமடத்தில் இருக்கிறபோது, எப்போது அருட்பணியாளராக மாறுவோம் என்ற ஆசை இருக்கிறது. அருட்பணியாளராக மாறியவுடன், எப்போது பங்குத்தந்தையாக மாறுவோம் என்று எண்ண ஆரம்பிக்கிறோம். பங்குத்தந்தையாக மாறியவுடன், குருமட வாழ்வை நினைத்துப் பார்த்து பெருமூச்சு விடுகிறோம். இல்லாத வாய்ப்பிற்காகப் போராடுகிறோம். வாய்ப்பு வருகிறபோது, தவறவிடுகிறோம். இதை தொடர்கதையாக மாற்றாமல், முழுமையாக, நிறைவாக, நமது வாழ்வை வாழப்பழகுவோம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.