இயேசுவின் மதிப்பீடுகள்

இயேசு தனது பணிவாழ்வில், சீடர்களை பயிற்றுவிப்பதில் சிறந்த ஆசானாக செயல்படுகிறார் என்பதை, இன்றைய நற்செய்தி நமக்கு சொல்கிறது. எப்படி? இயேசு தனது பயிற்சியை பல தளங்களாக செயல்படுத்துகிறார். அந்த வகையில், முதலில் தன்னுடைய சீடர்களுக்கு விசுவாசத்தின் அவசியத்தை விளக்குகிறார். அவர்களது விசுவாசத்தை அதிகப்படுத்த முயற்சி எடுக்கிறார். புதுமைகள் செய்கிறபோதும், மக்களிடம் போதிக்கிறபோதும், சீடர்கள் தன்னுடன் இருந்து, விசுவாசத்தை அதிகப்படுத்த வேண்டுமென எதிர்பார்க்கிறார். சீடர்கள் கற்றுக்கொள்ள கடினப்பட்டபோதிலும், இன்றைய நற்செய்தியில் அவர்கள் விசுவாசத்தைக் கற்றுக்கொண்டது தெளிவாகிறது. முதல் இலக்கில், தளத்தில் இயேசு வெற்றிபெறுகிறார். ஆனால், இது அடைய வேண்டிய இறுதி இலக்கு அல்ல. இன்னும் முன்னேற இலக்கு இருக்கிறது. அதை நோக்கி முன்னேற இயேசு முனைகிறார்.

சீடர்கள் விசுவாசத்தைக் கற்றுக்கொண்டவுடன், இயேசு அடுத்த தளத்திற்கு அவர்களை அழைத்துச் செல்கிறார். விசுவாசத்தோடு இருக்க வேண்டியவர்கள், எதிர்கொள்ள வேண்டிய சவால்களை அவர் முன்னெடுக்கிறார். விசுவாசத்தில் வாழ்கிறவர்களின் வாழ்க்கை எளிதானது அல்ல, அது ஒரு சவாலான பணி. ஆனாலும், விசுவாசத்தை காத்துக்கொள்வதில் சீடர்கள், மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்று அவர்களைப் பயிற்றுவிக்கிறார். இதுதான் இயேசுவின் வெற்றிக்கு காரணம். அவர் ஒரேநாளில் அனைத்தையும் கற்றுக்கொடுக்கவில்லை. சீடர்களின் புரிந்துகொள்ளும் திறனுக்கேற்ப, அனுபவத்திற்கேற்ப, அவர்களைப் பயிற்றுவிக்கிறார்.

நமது குழந்தைகளுக்கு அவர்களது இளவயதிலிருந்தே நாம் நல்ல மதிப்பீடுகளைக் கற்றுக்கொடுக்க வேண்டும். அவர்களின் வயது அதிகரிக்க, அதிகரிக்க அவர்களது வாழ்வை சுயமதிப்பீடு செய்து வாழ, அவர்களை நாம் பயிற்றுவிக்க வேண்டும். அத்தகைய நோக்கத்தோடு உழைக்கும் அருட்பணியாளர்கள் மற்றும் அருட்சகோதரிகளின் உழைப்பிற்கு நாம் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.