இயேசுவுடனான நெருக்கம்

இயேசுவோடு நெருங்கியிருப்பது, இணைந்திருப்பது எந்த அளவுக்கு, நமது வாழ்வை பக்குவப்படுத்தக்கூடிய அனுபவமாக இருக்கிறது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு தான், இன்றைய நற்செய்தி வாசகம். சீடர்கள் சாதாரணமானவர்கள். அறிவிலோ, திறமையிலோ சிறந்தவர்கள் அல்ல. சாதாரணமான பாமரரர்கள். அவர்கள் பல இடங்களுக்குச் சென்று மிகத்திறமையாகப் போதிக்கிறார்கள். பல சவால்களையும், சங்கடங்களையும் துணிவோடு எதிர்கொள்கிறார்கள். இந்த அளவுக்கு அவர்களைப் பக்குவப்படுத்தியது எது? என்று பார்க்கிறபோது, இயேசுவோடு இருந்த நெருக்கம் தான் அது.

வாழ்க்கையில் நாம் சந்திக்கக்கூடிய சவால்கள் எளிதானது அல்ல. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான வாழ்க்கைச்சூழல். அவர்கள் சந்திக்கும் சவால்களும் தனித்துவம் வாய்ந்தவை. யாரும், மற்றவருடைய பிரச்சனைகளுக்கு அவரவர் அனுபவத்தைக்கொண்டு தீர்வு காண முடியாது. குறைந்தபட்ச ஆலோசனைகளை மட்டுமே சொல்ல முடியும். ஆனால், எந்த பிரச்சனைகள் வந்தாலும், நாம் இயேசுவோடு நெருங்கியிருக்கிறபோது, கண்டிப்பாக நம்மால் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும். வாழ்வை மகிழ்வோடு நகர்த்த முடியும்.

நமது வாழ்வில் இயேசுவோடு இணைந்திருப்பதற்கு முயற்சி எடுப்போம். நமது வாழ்வின் பாதிக்கும் மேற்பட்ட பிரச்சனைகளுக்கு அது தீர்வாக அமையும். இயேசுவோடு சீடர்கள் கொண்டிருந்த நெருக்கத்தை நாமும் கொண்டிருப்போம். அது நம்மை வழிநடத்தும் நமக்கு சிறந்த வாழ்வை வாழ முன்னுதாரணமாய் இருக்கும்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.