இயேசுவைப்பின்தொடர்வோம்

இன்றைய வாசகம் (லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 21-24) மூன்று சிந்தனைகளைத் தருகிறது. முதல் சிந்தனை, எளிமையைப்பற்றியது. கடவுளின் திட்டத்தை ஞானிகளும், அறிஞர்களும் அறிந்துகொள்ளவில்லை. அவர்களால் புரிந்து கொள்ளவும் முடியவில்லை. மாறாக, குழந்தைகளுக்கு வெளிப்படுத்தப்பட்டது. குழந்தைகள் எதையும் திறந்த மனதோடு, இருப்பதை இருப்பதாகப்பார்ப்பவர்கள். எந்த ஒரு முன்சார்பு எண்ணத்தையும் வைத்துக்கொள்ளாதவர்கள். எளியவர்கள். அவர்களுக்குத்தான் கடவுளின் திட்டம் வெளிப்படுத்தப்படுகிறது. அர்னால்ட் பென்னட் என்கிற அறிஞர் சொல்வார்: ஒரு சிறந்த புத்தகம் எழுத வேண்டுமென்றால், நிகழ்வுகளை குழந்தையின் பார்வையில் பார்க்க வேண்டும். அது முற்றிலும் உண்மையானது. பெரியவர்களாகிய நாம் பலவித முன்சார்பு எண்ணங்களால் சிறைப்பிடிக்கப்பட்டு, நிகழ்வுகளை எளிமையாகக்காணாமல், முரண்பாடுகளோடு பார்க்கிறோம். அது தவறான பார்வை.

இயேசுவுக்கும் தந்தைக்குமான தனித்துவமிக்க உறவை இங்கே நாம் பார்க்கிறோம். எனவேதான், யோவான் நற்செய்தயாளர் (யோவான் 1: 14) வார்த்தை மனுவுருவானார் என்று எழுதுகிறார். 10: 31 ல் இயேசு சொல்கிறார்: ”நானும் தந்தையும் ஒன்றாக இருக்கிறோம்”. 14: 9 ல் பார்க்கிறோம்: ”என்னைக்காண்பது தந்தையைக் காண்பது ஆகும்”. ஆக, இயேசுவில் நாம் தந்தையின் குணநலன்களான, பரிவு, அன்பு, மன்னிப்பு, இரக்கம் போன்ற பண்புகளைப்பார்க்கிறோம். இயேசு தந்தையைப்பிரதிபலிப்பவராக இருக்கிறார். கடவுளின் சாயலில் படைக்கப்பட்டிருக்கிற நாமும் கடவுளை நம் வாழ்வில் பிரதிபலிக்க வேண்டும்.

வரலாற்றை நிறைவு இயேசுகிறிஸ்து தான். இன்றைய நற்செய்தியின் 23 மற்றும் 24 ல் இதைப்பற்றிதான் இயேசு கூறுகிறார். இறைவாக்கினர்களும், போதகர்களும் தன்னைப்பற்றி தான் முன்னுரைத்தார்கள் என்றும், அவர்களின் மறைநூல் வாக்கை தான்தான் நிறைவேற்றியதாக இயேசு கூறுகிறார். இந்த வரலாறு இயேசுவில் தான் நிறைவடையும். இந்த வரலாறு நிறைவடைவதும் இயேசுவில் தான். இயேசுதான் நாம் அடைய வேண்டிய இலக்கு. இயேசுவை பின்தொடர்வோம். அவரில் நமது முழுநம்பிக்கையை வைப்போம். .

~ அருட்பணி. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.