இயேசுவோடு இருக்கிற மகிழ்ச்சி

யூதர்களுக்கு தர்மம், செபம் மற்றும் நோன்பு ஆகிய மூன்றும் முக்கியமானவை. இயேசுவிடத்தில் யோவானின் சீடர்கள் நோன்பு பற்றி கேட்கும்போது, இயேசுவும் அவருடைய சீடர்களும் நோன்பிருக்கவில்லை. இயேசு நோன்பை ஒரு பொருட்டாக எடுக்கவில்லை என்பதல்ல இங்கே சுட்டிக்காட்டப்படு;ம் பொருள். மாறாக, இயேசுவின் பிரசன்னத்தை, இருப்பை வலியுறுத்துவதாக அமைவதுதான் இந்த நற்செய்திப்பகுதியின் மையம்.

இயேசு நம்மோடு இருக்கின்றபோது நாம் அதை மகிழ்வோடு கொண்டாட வேண்டும். இயேசு நம்மோடு இருப்பது நமக்கு மிகப்பெரிய ஆனந்தம் தருவதாக அமைகிறது. இயேசுவின் இருப்பு போற்றி மகிழ்வோடு இருக்கக்கூடிய நிகழ்வு. நாம் நோன்பு இருப்பது இயேசுவின் வருகைக்காகத்தான். கடவுளின் அருளைப்பெற்றுக்கொள்ளத்தான். அப்படியிருக்கின்றபோது, இயேசுவே நம்மோடு இருக்கின்றபோது நாம் ஏன் நோன்பு இருக்க வேண்டும்? என்பது இயேசுவின் கேள்வி.

ஒவ்வொருநாளும் நற்கருணையில் இயேசு எழுந்தருளி வருகிறார். அவர் நம்மோடு இருக்கின்றபோது நமக்கு கவலைகள் இருக்கக்கூடாது. இயேசு நம்மோடு இருப்பது நமக்கு மகிழ்வைத்தர வேண்டும். அந்த மகிழ்ச்சி நிலைத்திருக்க இறைவனை மன்றாடுவோம்.

~ அருட்பணி. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.