இயேசு தரும் எச்சரிக்கை

யேசுவின் இரண்டாம் வருகைக்காக பலபேர் நிச்சயம் காத்துக்கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால், அவரது இரண்டாம் வருகையில் தான், தங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த உலகத்தில் அநியாயத்திற்கு, செய்யாத தவறுக்கு, பலபேர் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். அதற்காக தங்களது வாழ்வையே இழந்திருக்கிறார்கள். ஆற்றோட்டத்தில் அடித்துச் செல்லப்படும் சாதாரண மீன்களைப் போல அல்லாமல், நீரோட்டத்தை எதிர்த்து நிற்கும் மீன்கள் போல, அநீதிகளுக்குச் சவால் விடுத்து, தங்கள் வாழ்வையே துறந்திருக்கிறார்கள். நிச்சயம் இவர்களின் நம்பிக்கை, இறைவன் முன்னால், தங்களுக்கு ஒருநாள் நீதி கிடைக்கும் என்பதுதான்.

திருவெளிப்பாடு 6: 10 ல் பார்க்கிறோம்: ”தூய்மையும் உண்மையும் உள்ள தலைவரே, எவ்வளவு காலம் உலகில் வாழ்வோருக்கு நீர் தீர்ப்பு அளிக்காமல் இருப்பீர்? எங்களைக் கொலை செய்ததன் பொருட்டு எவ்வளவு காலம் அவர்களைப் பழிவாங்காமல் இருப்பீர்?” என்று கிறிஸ்துவி்ன் பொருட்டு, கிறிஸ்துவுக்காக இறந்தவர்கள் கேட்பதை, அங்கே நாம் வாசிக்கிறோம். இவ்வளவுக்கு பலபேர் ஆவலோடு எதிர்பார்க்கிற, இரண்டாம் வருகை எப்போது, நடக்கும்? இரண்டாம் வருகை நிச்சயம் இருக்கும். ஆனால், அது எப்போது என்பது யாருக்கும் தெரியாது? அதை தேவையில்லாமல், இன்று நடக்குமா? நாளை நடக்குமா? என்று எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பதும் வீணாகத்தான் இருக்கும், என்பது இயேவின் போதனையின் மையப்பகுதி.

இயேசு நமக்குச் சொல்ல வருகிற செய்தி, தவறான செய்திகளைக் கேட்டு நாம் ஒருபோதும் ஏமாந்து போகக்கூடாது. இயேசுவின் பெயரைச் சொல்லி, அதன் மூலமாக இலாபம் சம்பாதிக்க வேண்டும், என்று நடமாடு போலிப்போதகர்கள் நடுவில், நாம் மிகவும் எச்சரிக்கை உணர்வோடு இருக்க வேண்டும், என்பதை நமது வாழ்விற்கான செய்தியாக எடுத்துக் கொள்வோம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.