இயேசு தரும் வாழ்வு

இயேசுதான் வாழ்வு தரும் உணவு. நமது வாழ்வுக்கு அடிப்படையும் இதுதான். இயேசு தரும் அழைப்பை ஏற்றுக்கொள்ளாவிட்டால், நாம் இந்த உலகவாழ்வில் மட்டுமல்ல, வரக்கூடிய மறுஉலக வாழ்வையும் இழந்துவிடுவோம். இயேசு நமக்கு தரக்கூடிய வாழ்வை, இயேசு நமக்காக ஏற்பாடு செய்திருக்கிற வாழ்வை, நாம் பெறுவதற்கு, இன்றைய வாசகம் நமக்கு அழைப்பு விடுக்கிறது.

யூதப்போதகர்கள் இதுபற்றி அடிக்கடி ஒரு சொல்லாடல் கையாள்வதுண்டு. ”பாலைநிலத்தில் தங்கியவர்களுக்கு வாக்களிப்பட்ட தேசத்தில் இடமில்லையென்று”. அதனுடைய பொருள் இதுதான்: எகிப்திலிருந்து மக்கள் வாக்களிப்பட்ட தேசத்திற்கு கால்நடையாக வந்தனர். அப்போது பாலைநிலத்தில் அவர்கள் தங்கினர். ஆனால், அது அவர்கள் அடைய வேண்டிய இலக்கு அல்ல. இன்னும் பயணம் செல்ல வேண்டும். ஆனால், பெரும்பாலானோர் அந்த பாலைவனத்திலே தங்கியிருப்பதை விரும்பினார்கள். வாக்களிப்பட்ட தேசத்திற்குச் செல்கிறபோது எதிர்கொள்ளும் தடைகளைத்தாங்குவதற்கு அவா்கள் விரும்பவில்லை. எனவே, அவர்களுக்கு வாக்களிப்பட்ட தேசத்தில் இடமில்லை. அதற்கான தகுதியை அவர்கள் இழந்துவிட்டார்கள். அதேபோலத்தான், இயேசுவின் அழைப்பு நிலையான வாழ்வுக்கு அழைப்பு. அந்த அழைப்பை ஏற்று, அதனை இலக்காக வைத்து, நமது இப்போதைய வாழ்வை மாற்றி, அவர் காட்டுகிற வழியில் நாம் வாழ முற்பட வேண்டும். இல்லையென்றால், நிலையான வாழ்விற்கு நம்மால் தகுதி பெற முடியாது.

இயேசு நமக்கு நாம் எப்படி வாழ வேண்டும் என்று வாழ்ந்து காட்டியிருக்கிறார். எப்படி வாழ வேண்டும் என்று சொல்லித் தந்திருக்கிறார். அவர் காட்டும் நெறியில் நடந்து, நாம் நமது வாழ்வைச் சீர்படுத்தி, இறையாட்சிக்கு நம்மையே தகுதிபடுத்துவோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.