இரக்கம் காட்டும் ஆண்டவர்

நொடிப்பொழுதே நான் உன்னைக் கைவிட்டேன்:ஆயினும் பேரிரக்கத்தால் உன்னை மீண்டும் ஏற்றுக்கொள்வேன். எசாயா 54:7.ல் வாசிக்கிறோம். ஆண்டவர் நம்மேல் வைத்துள்ள பேரிரக்கத்தால் அனுதினமும் நமக்கு ஒரு பொல்லாப்பும் நேரிடாமல் காத்து வருகிறார். நம் தவறுகளுக்கு மன்னிப்பு அளிக்காமல் தண்டனை தருவாரானால் இந்த உலகில் ஒருவரேனும் இருப்போமா? என்று தெரியவில்லை.

பொங்கியெழும் சீற்றத்தால் இமைப்பொழுதே என் முகத்தை உனக்கு மறைத்தேன். ஆயினும் என்றுமுள பேரன்பால் உனக்கு இரக்கம் காட்டுவேன், என்கிறார் ஆண்டவர். ஏசாயா 54:8 இமைப்பொழுது தமது முகத்தை மறைப்பதால் நாம் எவ்வளவு பாடுகளை, துன்பங்களை சந்திக்க வேண்டி உள்ளது. அந்த இமைப்பொழுதும் ஆண்டவர் மறைக்காமல் இருக்க நாம் அவர் விரும்பும்படி செய்து அவரின் ஆலோசனைகளையும் எண்ணங்களையும் நிறைவேற்றுவோம்.

அப்பொழுது நமக்கு எதிராக உருவாக்கப்படும் எந்த காரியத்தையும் நம்மேல் வராமல் பாதுக்காத்துக்கொள்வார். நம்மேல் குற்றம் சாட்டித் தீர்ப்புச் சொல்ல எழும் எந்த நாவையும் அவர் அடக்கிபோடுவார். ஏனெனில் மண்ணுலகிலிருந்து விண்ணுலகம் மிக உயர்ந்து இருப்பதுபோல நம்முடைய வழிமுறைகளைவிட ஆண்டவரின் வழிமுறைகளும் நமது எண்ணங்களைவிட ஆண்டவரின் எண்ணங்களும் உயர்ந்திருக்கின்றது.

எனவே ஆண்டவரின் வார்த்தைக்கு செவிகொடுப்போம். அவரே நமது வாழ்வை செழிக்கச் செய்வார். அவரே தொடர்ந்து நம்மை வழிநடத்துவார். வறண்ட சூழலில் நமக்கு நிறைவளிப்பார். நம் எலும்புகளை வலிமையாக்கி நம் நோய் எல்லாம் மாற்றி போடுவார். நீர் பாய்ந்த தோட்டம்போலவும், என்றும் வற்றாத நீரூற்றைப் போலவும் நம் வாழ்வை கட்டி எழுப்புவார். வானமும், பூமியும் கூட ஒழிந்துப்போகும். அவர் வார்த்தை என்றும் மாறாது. அவரின் இரக்கம் என்றும் நம்மோடு இருக்கும்.

ஜெபம்

அன்பின் ஆண்டவரே!இரக்கத்தின் கன்மலையே! எங்கள் தஞ்சமும் கேடகமும் ஆனவரே! உமது இரக்கத்தை அளவில்லாமல் எங்கள்மேல் பொழிந்தருளும். நாங்கள் தெரியாமல் செய்யும் பாவங்களை பொறுத்தருளும். உம்முடைய இரத்தம் சகல பாவங்களையும் மன்னித்து காக்குமே. அவ்வாறே காத்தருளும். எங்களிடத்தில் உள்ள தீய குணங்களை அப்புறப்படுத்தும். தியாகமுள்ள அன்பினால் எங்களை நீர் காத்தது போல நாங்களும் ஒருவருக்கொருவர் தியாகமுள்ள அன்பை செலுத்தி உம்மைப்போல் வாழ போதித்து வழிநடத்தும். எங்கள் விசுவாசத்தில் எப்பொழுதும் உறுதியாய் இருந்து உம்மை போற்றி துதிக்க உதவியருளும்.மீட்பர் இயேசுகிறிஸ்துவின் இன்ப நாமத்தில் வேண்டுகிறோம் எங்கள் மீட்பரே!ஆமென்!!அல்லேலூயா!!!

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.