இருந்து பார்ப்போமா… சந்தித்து சாதிப்போமா..

புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள்

இருந்து பார்ப்போமா… சந்தித்து சாதிப்போமா..
மாற்கு 6:17-29

இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துதுகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.

அன்புமிக்கவர்களே! இன்று நாம் புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள் பற்றி சிந்திக்கிறோம். ஐயோ பாடுகளா? என பாடுகளைப் பார்த்ததும் பயந்து ஒளிந்துக் கொள்ளும் மனிதர்கள் வாழும் உலகம் இது. இன்றைய திருவிழா பாடுகளை மகிழ்வோடு ஏற்ற புனித திருமுழுக்கு யோவானை சுட்டிக்காட்டுகிறது. அவருக்கு எதற்காக பாடுகள்? எதற்காக அச்சுறுத்தல்கள்? எதற்காக கொலை செய்யப்பட்டார்?

அவர் நேர்மையோடும் தூய்மையோடும் இருந்தார். ஆகவே அவர் பாடுகளை சந்தித்தார். அதற்காகவே அவர் கொலை செய்யப்பட்டார். நாமும் அவரைப் போல இருந்து பாடுகளை சந்திப்பதே, கிறிஸ்துவுக்கு சாட்சியாவதே இந்த விழாவின் நோக்கமாகும். பொய்யிலிந்து உண்மைக்கும், அசுத்தத்திலிந்து தூய்மைக்கும் கடந்து வருவதே இந்த திருவிழாவின் சிறப்பு.

1. நேர்மையோடு இருப்போமா..
புனித திருமுழுக்கு யோவான் உண்மையோடு இருந்ததற்காக பாடுகள். உண்மையோடு இருப்பது குற்றமாப்பா? ஆம். உண்மையோடு இருப்பது தான் குற்றம் இந்த உலகில். பொய்யை கொண்டிருந்தால் வாழலாம். ஆனால் உண்மையோடு இருந்தால் வாழ முடியாது. இது உலகின் கூற்று.

இதை உடைப்போம். நாம் பலர் உண்மையோடு வாழ்வோம். நேர்மையோடு வாழ்வோம். உறுதிமொழி எடுத்து உறுதியாய் இருப்போம்.

2. தூய்மையோடு இருப்போமா…
புனித திருமுழுக்கு யோவான் தூய்மையோடு இருந்தற்காக மரணத்தண்டனையை அனுபவித்தார். தூய்மையோடு இருப்பது குற்றமாப்பா? ஆம். தூய்மையோடு இருப்பது தான் குற்றம் இந்த உலகில். அசுத்தத்தை கொண்டிருந்தால் வாழலாம். ஆனால் தூய்மையோடு இருந்தால் வாழ முடியாது. இது உலகின் கூற்று.

இதை உடைப்போம். நாம் பலர் சுத்தமாக வாழ்வோம். தூய்மையோடு வாழ்வோம். உறுதிமொழி எடுத்து உறுதியாய் இருப்போம்.

மனதில் கேட்க…
1. நான் திருமுழுக்கு பெற்றது எதற்கு? உண்மையோடும் தூய்மையோடும் இருக்கத்தானே?
2. திருமுழுக்கு யோவான் போல நான் உண்மையோடு இருந்து தூய்மையைச் சந்தித்து சாதிப்பேனா?

மனதில் பதிக்க…
நாம் தூயோராகவும், மாசற்றோராகவும் தம் திருமுன் விளங்கும்படி, உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார். (எபே 1:4)

~ அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.