இறைத்திட்டத்திற்கு அர்ப்பணிப்போம்

திருத்தூதர் பணி 8: 1 – 8
இறைத்திட்டத்திற்கு அர்ப்பணிப்போம்

அழுகை, மகிழ்ச்சி என்கிற இரண்டுவிதமான உணர்வுகளையும் சேர்த்து, இந்த வாசகம் நமக்கு தருகிறது. அழுகைக்கு காரணம் என்ன? ஸ்தேவான் இறந்துவிட்டார். கிறிஸ்துவின் நற்செய்தியை துணிவோடு அறிவித்த ஸ்தேவான் கொலை செய்யப்பட்டுவிட்டார். அது மட்டுமல்ல, கிறிஸ்தவர்களை சவுல் துன்புறுத்துகிறார். மகிழ்ச்சிக்கு காரணம் என்ன? பிலிப்பு நற்செய்தியை அறிவிக்கின்றார். மக்கள் நடுவில் பல புதுமைகளைச் செய்கிறார். ஆக, ஒருபுறத்தில் மக்கள் கவலையினாலும், துன்பங்களினால் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். மறுபுறத்தில், மக்கள் மகிழ்ச்சியின் விளிம்பில் இருந்து கொண்டிருக்கிறார்கள்.

ஸ்தேவானின் இறப்பு நிச்சயம் மக்களுக்கு மிகப்பெரிய இழப்பை உருவாக்கியிருக்க வேண்டும். இதற்கு மேல், தங்களுக்கு கடவுளுடைய வார்த்தையை யார் போதிப்பார்கள்? என்கிற எண்ணம் சந்தேகமாய் எழுந்திருக்க வேண்டும். ஆனால், கடவுளின் திட்டம் அற்புதமானது, ஆச்சரியத்தை உண்டு பண்ணக்கூடியது என்பதை மக்கள் அறிந்திருப்பார்கள். அதனுடைய வெளிப்பாடு தான், இந்த கவலையும், மகிழ்ச்சியும். கடவுளின் மீட்புத் திட்டம் ஒரு குறிப்பிட்ட மனிதரோடு முடிந்து விடுவதில்லை. குறிப்பிட்ட காலத்தோடு முற்றுப்பெறுவதில்லை. அது தொடர்ந்து நடைபெறக் கூடியது. அதற்கு முடிவே கிடையாது. ஒவ்வொரு காலத்திலும் கடவுள் தொடர்ந்து பல நல்ல மனிதர்கள் மூலமாக தன்னுடைய மீட்புத்திட்டத்தைச் செயல்படுத்திக் கொண்டேயிருக்கிறார். மக்களின் கண்ணீரைத் துடைத்துக் கொண்டேயிருக்கிறார்.

கடவுளின் இந்த மீட்புத்திட்டத்திற்கு நம்மையே முழுமையாகக் கையளிக்க வேண்டும். ஸ்தேவானுக்கு பிறகு யார்? என்கிற கேள்வி எழுவதற்கு முன்பாகவே, பிலிப்பு தன்னை கடவுளின் திட்டத்திற்கு முழுமையாக கையளித்தார். அதேபோல, நம்முடைய வாழ்க்கையில் எப்போதும், கடவுளின் திட்டத்திற்கு முழுமையாக செவிகொடுக்கிறவர்களாக வாழ, மனமுவந்து நம்மைக் கையளிப்போம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.