இறையனுபவத்தின் பகிர்வு

தூய பவுலடியார் தனது திருமுகத்தில் விசுவாசத்தைப் பற்றி கூறுகிறபோது, நாம் எப்படி மற்றவரின் விசுவாசம் தளர்ச்சியடைகிறபோது தாங்கிப்பிடிக்க வேண்டும்? என்பதை அருமையாகச் சொல்வார். விசுவாசத்தளர்ச்சி என்பது அனைவருக்குமே வரக்கூடிய ஒன்று. அதற்கு நமது பலவீனம் நிச்சயம் முதன்மையான காரணம். அந்த விசுவாசத்தளர்ச்சி வருகிறபோது, மற்றவர்கள் அவரைத் தாங்கிப்பிடிக்க வேண்டும். அதுதான் உண்மையான கிறிஸ்தவ வாழ்வு. இந்த எம்மாவு சீடர்களின் இந்த உயிர்ப்பு அனுபவமும் இதனையொற்றி வரக்கூடிய நிகழ்ச்சி தான்.

எம்மாவு சீடர்கள் உயிர்த்த இயேசுவின் அனுபவத்தைப் பெற்ற பிறகு, தங்களோடு அந்த அனுபவத்தை வைத்திருக்கவில்லை. மாறாக, அதனை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்கிறார்கள். ஒருவருடைய அனுபவப்பகிர்வு மற்றவர்களுக்கு மிகப்பெரிய உந்துசக்தியாக இருக்கிறது. தொடக்க கால கிறிஸ்தவர்கள் மத்தியில் இத்தகைய பகிர்வு தான் அவர்களின் விசுவாசத்தை வளர்க்கிற ஆணிவேராக இருந்து வந்தது. அனைவருமே உயிர்த்த இயேசுவைப் பார்த்ததில்லை. ஆனால், உயிர்ப்பு அனுபவத்தைப் பெற்றார்கள். எப்படி? உயிர்த்த இயேசுவை நேரடியாகப் பார்த்த சீடர்களிடமிருந்து.

நமது விசுவாசமும் இத்தகைய இறையனுபவத்தை நேரடியாகப் பெறுகிறபோது, அந்த அனுபவத்தை, மற்றவர்களோடு நாம் பகிர்ந்து கொள்ள முன்வர வேண்டும். ஏனென்றால், இத்தகைய இறையனுபவம் தான், திருச்சபையின் வளர்ச்சியில் அதிக பங்கு கொண்டிருக்கிறது.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.