இறையாட்சி பேச்சில் அல்ல,செயல்பாட்டில்தான் இருக்கிறது.1 கொரிந் தியர் 4:20.

நீங்கள் கடவுளுடைய கோவிலென்றும் கடவுளின் ஆவியார் உங்களில் குடியிருக்கிறார் என்றும் உங்களுக்கு தெரியாதா? ஒருவர் கடவுளின் கோவிலை அழித்தால் கடவுள் அவரை அழித்துவிடுவார். ஏனெனில் கடவுளின் கோவில் தூயது. நீங்களே அக்கோவில் என்று வேதத்தில் வாசிக்கிறோம். நாம் கடவுளை பின்பற்றி அவரின் வார்த்தைகளை கைக்கொண்டு நடப்போமானால் நம்முடைய செயல்பாட்டை வெறும் பேச்சில் அல்லாது அதை செயல்பாட்டில் காண்பிக்கிறவர்களாய் வாழ வேண்டும்.

ஆண்டவர் கட்டளையிடும் அனைத்து காரியங்களையும் கடைப்பிடித்து உண்மையாய் நடந்தால் நம்மை ஆசீர்வதித்து உயர்த்துவார். நாம் நம்மையே ஏமாற்றிக்கொள்ளாதபடிக்கு நமது மன விருப்பங்களின் படி செய்து இதுதான் கடவுள் விரும்பும் காரியம் என்று பாவ வாழ்க்கையில் ஈடுபட்டால் நம் செயல்பாட்டில் குறை உள்ளவர்களாய் ஆவோம்

நமக்கு நாமே தீர்ப்பளித்துக்கொள்ளக் கூடாது. ஏனெனில் வேதத்தில் நாம் வாசிப்பது படி எனக்கு எதிராகக் குற்றம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆயினும், நான் குற்றமற்றவனாகி விடமாட்டேன். எனக்குத் தீர்ப்பு வழங்குபவர் ஆண்டவர் ஒருவரே.எனவே, குறித்த காலம் வருமுன், அதாவது ஆண்டவரின் வருகைக்குமுன் யாருக்கும் தீர்ப்பளிக்க வேண்டாம்.அவரே இருளில் மறைந்திருப்பவற்றை வெட்ட வெளிச்சமாக்குவார்: உள்ளங்களின் நோக்கங்களையும் வெளிப்படுத்துவார். அப்பொழுது ஒவ்வொருவரும் கடவுளிடமிருந்து பாராட்டுப் பெறுவார்கள். 1கொரிந்தியர் 4 :4,5.

நமக்கு கடவுள் ஒருவரே;அவரே நம் தந்தை.அவரிடமிருந்தே அனைத்தும் வருகின்றன. அவருக்காக நாம் இருக்கின்றோம். அவ்வாறே நமக்கு ஆண்டவரும் ஒருவரே; அவரே இயேசுகிறிஸ்து. அவர் வழியாகவே அனைத்தும் வருகின்றன.அவர் மூலமாகவே நாம் ஒவ்வொருவரும் வாழ்கிறோம். ஆகையால் நாம் நம்முடைய வாழ்க்கையை வெறும் பேச்சில் அல்லாமல் ஆண்டவரின் ஒவ்வொரு வார்த்தைக்கும் பயத்தோடும், நடுக்கத்தோடும் கீழ்படிந்து செயல்பாட்டில் காண்பிப்போம்.இதுவே கடவுளுக்கு மிகவும் பிரியமானது.

ஜெபம்.

எங்களை அதிகமாய் நேசிக்கும் அன்பின் தேவனே! உம்மை போற்றுகிறோம், ஆராதிக்கிறோம். உம்மிடத்தில் எங்களை அர்ப்பணிக்கிறோம். நீர் விரும்பும் வாழ்க்கையை வாழ எங்களுக்கு போதித்து வழிநடத்தும். வெறும் பேச்சில் அல்லாது செயல்பாட்டிலும் உமது மாதிரியை பின்பற்றி அன்போடும், இரக்கத்தோடும், பரிவோடும், பாசத்தோடும் நடந்து உமக்கே மகிமை சேர்க்க உதவிச் செய்யும். இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வேண்டுகிறோம் எங்கள் உயிருள்ள தந்தையே!
ஆமென்!! அல்லேலூயா!!!

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.