இறைவனின் அருட்கரம்

விருந்தோம்பல் என்பது மத்திய கிழக்குப் பகுதியில் புனிதமான ஒன்றாகக் கருதப்பட்டது. அறிமுகமில்லாத நபர்கள் வந்தாலும், அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் கவனிப்பது ஒரு யூதரின் முக்கியக் கடமையாக இருந்தது. அறிமுகமில்லாத நபர்களுக்கே இப்படி என்றால், விருந்தினர்களுக்கு எப்படிப்பட்ட உபசரிப்பு கொடுக்கப்பட வேண்டும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பொதுவாக விருந்தில் திராட்சை இரசம் பரிமாறப்பட்டது. திராட்சை இரசம் மகிழ்ச்சியின், விருந்தின் அடையாளம். அதில் தண்ணீர் கலந்து பரிமாறினார்கள். ஆக, திருமண விருந்து வீடு. விருந்தினர்கள் வந்திருக்கிறார்கள். அது மகிழ்ச்சியின் இடம். இப்படிப்பட்ட இடத்தில் திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது என்றால், நிச்சயம் அதைவிட திருமண வீட்டார்க்கு அவமானம் ஏதுமில்லை. அவர்களின் நிலைமை படுமோசமானதாக இருந்தது.

பாலஸ்தீனம் பகுதியில் ஏழைகளும், வறியவர்களும் மிகுந்திருந்தனர். உணவுக்காக கடுமையாக அவர்கள் உழைக்க வேண்டியிருந்தது. அப்படியிருக்கிறவர்களுக்கு, திருமண விருந்து என்பது, அந்த வேதனைகளை எல்லாம் மறந்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய தருணமாக, இருக்க வேண்டும். அந்த கொண்டாட்டத்திற்கு வழியே இல்லையென்றால், அது விருந்தினர்களின் முகச்சுளிப்பிற்கு உள்ளாக நேரிடும். அது மணமக்களின் மீது வெறுப்புணர்வை வீசுவதாகக் கூட மாறிவிடலாம். இத்தகைய சிக்கலான கட்டத்தில் தான், இயேசு அவர்களுக்கு உதவ முன்வருகிறார். நெருக்கடிச்சூழ்நிலை நம்மைத் தாக்க வரும்போதும், நம்மைக் காக்க வல்லவர், நம் ஆண்டவர் இயேசு ஒருவர் தான், என்பதை இந்த பகுதி நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

நமது வாழ்விலும் பல இக்கட்டான நேரங்களை நாம் எதிர்கொண்டிருக்கலாம். அந்த தருணங்களில் கடவுளின் அருட்கரம் நிச்சயம் நம் அருகில் இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ஆண்டவர் எப்போதும் நம் அருகிலேயே இருக்கிறார். அவர் நம்மைக் காப்பதற்கு காத்துக்கொண்டிருக்கிறார். அந்த இறைவனிடம் நம்மையே நாம் ஒப்படைப்போம்.

~அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.