இறைவனின் அழைத்தல்

கடவுளின் பணிக்காக தங்களையே அர்ப்பணித்திருக்கிற கடவுளின ஊழியர்களுக்கான அதிகாரம் எங்கிருந்து வருகிறது? என்பதை விளக்கக்கூடிய அருமையான பகுதிதான், இன்றைய நற்செய்தி வாசகம். பேதுருவை தலைவராக முடிவு செய்ய வேண்டும் என்று இயேசு நிச்சயமாக ஏற்கெனவே முடிவெடுத்திருக்க மாட்டார். கடவுள் அந்த பொறுப்பை யாருக்கு வைத்திருக்கிறாரோ, அவருக்கே உரியது என்பதில் இயேசு தெளிவாக இருக்கிறார். கடவுளின் திருவுளம் எது? என்பதை அறிவதற்காக இயேசு இந்த கேள்வியைக் கேட்கிறார்.

பேதுருவின் பதிலைக்கேட்டவுடன், இயேசுவுக்கு மகிழ்ச்சி வந்திருக்க வேண்டும். தன்னைப்பற்றி சொன்னதற்காக அல்ல, தனக்கு பிறகு திருச்சபைக்கு யார் தலைவர்? என்பதை, கடவுள் வெளிப்படுத்திவிட்டார் என்பதற்காக. அந்த பதிலை இயேசு நிச்சயமாக ரசித்திருக்க வேண்டும். உடனே இயேசு பேதுருவைப்பார்த்து, அதனை வெளிப்படுத்தியது இறைத்தந்தையே, என்று சான்றுபகர்கிறார். ஆக, கடவுளின் பணியாளர்கள் அனைவருமே, இறைவனால் ஏற்படுத்தப்பட்டவர்கள் என்பதை, இது தெளிவுபடுத்துகிறது. ஒருவருடைய திறமையினால் அல்ல, கடவுளின் அருளால் தான், அழைத்தலைப் பெறமுடியும், என்பது இங்கே நமக்கு தெளிவாகிறது.

கடவுளின் அழைப்பைப் பெற்றிருக்கிறவர்கள் மட்டில், நாம் எந்த அளவுக்கு மதிப்போடும், மாண்போடும் இருக்க வேண்டும் என்பது, இங்கே நமக்குச் சொல்லப்படுகிறது. கடவுளின் அழைப்பைப் பெற்றவர்களுக்கு கீழ்ப்படிந்து, அவர்களுக்கு நம்முடைய முழுமையான ஒத்துழைப்பைக் கொடுப்பதுதான், நமது கடமையாகும்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.