இறைவனின் இரக்கம்

கப்பர்நாகுமிலிருந்து ஒருநாள் பயணம் செய்தால், நயீன் ஊரை அடைந்து விடலாம். நயீன் என்ற இந்த ஊர், என்டோருக்கும், சூனேமுக்கும் இடையே உள்ளது. இந்த சூனேமில் தான் இறைவாக்கினர் எலிசா இறந்த பிள்ளைக்கு உயிர் கொடுத்திருந்தார். லூக்கா நற்செய்தியாளர் 13 வது இறைவார்த்தையில், இயேசு அந்த தாயின் மீது பரிவு கொண்டதாக எழுதுகிறார். ஏனென்றால், அந்த தாய் ஒரு விதவை மற்றும் அத்தாய்க்கு அவன் ஒரே மகன்.

பரிவு என்கிற வார்த்தை தான், கிரேக்க மொழியில் இரக்கத்திற்கு அதிக அழுத்தம் கொடுக்கிற வார்த்தை. இதற்கு மேல் இரக்கம் காட்ட முடியாது என்கிற அளவுக்கு வலிமையான வார்த்தை. ஆனால், இந்த வார்த்தையை நற்செய்தியாளர் பயன்படுத்தியதில் ஒரு குழப்பம் இருக்கிறது. பழங்காலத்தில் கடவுளை மக்கள் உணர்வுகள் இல்லாதவராகப்பார்த்தனர். அதற்கு காரணமும் இருக்கிறது. ஒரு மனிதர் அடுத்தவரை கவலைப்பட வைத்தாலோ, மகிழ்ச்சி கொள்ள வைத்தாலோ, அவரைவிடப்பெரியவர். அதாவது மற்றவரை தன்வயப்படுத்துகிற சக்தி அவருக்கு இருக்கிறது என்பது பொருள். எனவே, மற்றவரை விட அவர் சிறந்தவர். கடவுளை ஒருவர் உணர்வுக்கு இடம்கொடுக்க வைத்தால், கடவுளைவிட அவர் பெரியவராகிவிடுகிறார். அப்படி இருக்கவே முடியாது. எனவே, கடவுள் உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவர் என்று மக்கள் நம்பினர். ஆனால், அந்த தாயின் மீது இயேசு பரிவு கொள்வது, கடவுள் நம்மை, நம்முடைய உணர்வுகளை அனுபவப்பூர்வமாக உணர்கிறார் என்பதைக்காட்டுகிறது.

நமது கடவுள் எங்கோ இருந்து, நம்முடைய உணர்வுகளை அறியாத கடவுள் அல்ல. மாறாக, அவர் நம்மில் ஒருவர். நம்மைப்புரிந்து கொள்கிறவர். நமது துன்பங்களை உணர்ந்துகொள்கிறவர். அத்தகைய இறைவனிடம், நமது உணர்வுகளை துணிவோடு, நம்பிக்கையோடு வெளிப்படுத்துவோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.