இறைவனின் குரலுக்குச் செவிகொடுப்போம்

எசாயா 48: 17 – 19

இஸ்ரயேல் மக்கள் எந்த இடத்தில் தடம்புரண்டார்கள்? அவர்களின் இன்றைய இழிநிலைக்கு காரணம் என்ன? என்பதை, இன்றைய வாசகத்தில் பார்க்கிறோம். இஸ்ரயேல் மக்கள் தங்களை இதுநாள் வரை வழிநடத்தி வந்து, வெற்றி தேடிக்கொடுத்த, இறைவனின் வார்த்தைகளுக்கு செவிகொடுக்காமல் நடந்தது தான், அவர்களின் மோசமான நிலைக்கு காரணமாக, இறைவாக்கினர் அறிவிக்கின்றார். இறைவன் ஒருவா் தான், பயனுள்ளவற்றையும், மனிதர்கள் மகிழ்ச்சியாயிருக்கத் தேவையானவற்றையும் கற்பிக்கிறவர்.

ஆனால், மனிதன், கடவுளை நம்பாமல், வேற்றுத் தெய்வங்களையும், வேற்று நாட்டினரையும் நம்பி மோசம் போனான். அப்படி அவர்கள் இறைவனின் குரலுக்குச் செவிகொடுத்து, மற்றவர்களைப் புறம்தள்ளியிருந்தால், இன்றைக்கு அவர்கள் மகிழ்ச்சியாக இருந்திருப்பார்கள். பலவற்றை இழந்திருக்க மாட்டார்கள். அவர்களது பெயர் கடவுளின் திருமுன்னிலையிலிருந்து அகற்றப்பட்டிருக்காது. இப்போதோ, அவர்கள் அனைத்தையும் இழந்துவிட்டார்கள். ஆனாலும், அவர்களுக்கான வழி அடைக்கப்படவில்லை. இப்போது அவர்கள் தங்கள் வழிகளை மாற்றிக்கொண்டு, இறைவனின் வார்த்தைக்கு செவிகொடுத்தாலும், அவர்களின் வாழ்வில் வசந்தம் வரும். அவர்கள் மீண்டும் இழந்தவற்றைப் பெற்றுக்கொள்வார்கள். எனவே, அவர்களுக்கான வாய்ப்பு இன்னும் முற்றிலுமாக முடிவுபெற்று விடவில்லை. இறைவன் கொடுக்கிற இந்த அழைப்பை ஏற்று, அவர்கள் தங்கள் வாழ்க்கையைத் திருத்திக் கொள்வதற்கு முன் வர வேண்டும் என்பதே இறைவனின் ஆசை.

நம்முடைய வாழ்விலும் இறைவன் நமக்கு பல வாய்ப்புக்களை வழங்குகிறார். அவருடைய குரலுக்குச் செவிகொடுக்க வேண்டுமென்று எதிர்பார்க்கின்றார். அவருடைய வழிகளைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்று நம்மை அழைக்கிறார். இறைவனின் அழைப்பை ஏற்று, அவருடைய பிள்ளைகளாக நாம் வாழ, இறையருள் வேண்டுவோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.