இறைவனின் தாயுள்ளம்

ஓசேயா 11: 1 – 4, 8 – 9

இறைவாக்கினர் ஓசேயாவின் நூலில் “திருமணம்” என்கிற உறவைப்பற்றிய உருவகம் இருப்பதை நாம் இதுவரை பார்த்தோம். இஸ்ரயேலுக்கும், இறைவனுக்கும் உள்ள உறவு, இந்த திருமண உறவு போன்றது என்பதைத்தான், இறைவாக்கினர் தன்னுடைய இறைவார்த்தையில் பகிர்ந்துகொள்கிறார். ஆனால், 11 ம் அதிகாரம், சற்று மாறுபட்ட உருவகத்தை நமக்குக் கொடுத்து, இந்த அதிகாரத்திற்கான தனித்துவத்தை சிறப்பாக விளக்கிக் கூறுகிறது. இந்த அதிகாரத்தில், பெற்றோர்-பிள்ளை உருவகம் பயன்படுத்தப்படுகிறது. இந்த அதிகாரம் தான், இறைவனுடைய ஆழ்மனத்தை நாம் அறிவதற்கு உதவியானதாக இருக்கிறது. இறைவன் என்றாலே, அன்பும், இரக்கமும் நிறைந்தவர் என்பதை, இந்த அதிகாரத்தில் நாம் கற்றுக்கொள்ளலாம்.

ஒரு குழந்தையை, அந்த குழந்தையின் தாய் எப்படியெல்லாம் வளர்க்கிறாள்? என்பது நாம் அறிந்த ஒன்று. அது பேசும் மழலைச்சொல், அதுநடைபயிலும் அழகு, அதன் வளர்ச்சி ஒவ்வொன்றிலும் தாய் அகமகிழ்கிறாள். குழந்தையின் உலகமாக இருக்கிறாள். குழந்தைக்கும் தாய் தான், உலகமாக இருக்கிறது. அதேபோல இஸ்ரலே் என்னும் குழுந்தையை இறைவன் வளர்க்கிறார். அதன் வளர்ச்சியில் பூரிப்பு அடைகிறார். இஸ்ரயேல் தனக்கு தாயாக இருந்து வழிநடத்துகிற இறைவன்பால், முழு அன்பு கொண்டதாக இருக்கிறது. ஆனால், ஒரு கட்டத்தில், தன் தாயை விட்டு, அது விலகி தவறான பாதைக்குச் செல்கிறது. தவறான பாதைக்குச் செல்லும் குழந்தையை கண்டித்து திருத்துவது, ஒரு தாயின் கடமை அல்லவா? அது தவறு என்று யாராவது சொல்வார்களா? ஒருவேளை அந்த குழந்தையைக் கண்டித்து திருத்தவில்லை என்றால் சொல்வார்கள். அந்த தாய் கண்டிக்கிறாள் என்பதற்காக, அந்த குழந்தையின் மீது, அவளுக்கு அன்பு இல்லை என்று யாராவது சொல்ல முடியுமா? நிச்சயமாக இல்லை. ஆக, இறைவன் இஸ்ரயேல் மீது கொண்டிருக்கிற ஆழமான அன்பை இது வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.

இறைவன் நம் மீது வைத்திருக்கிற அன்பின் ஆழத்தை நாம் உணர வேண்டும். நான் தவறு செய்தால் என்னை தண்டிப்பாரா? என்று கேட்பதை விட, இறைவன் எந்த அளவுக்கு என் மீது அன்பு வைத்திருக்கிறார் என்பதை, நாம் உணர வேண்டும். அந்த நேர்மறை பார்வை தான், நம்மை இறைவனின் முழுமையான அன்பை உணரச்செய்வதாக இருக்கும்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.