இறைவனின் திருவுளம்

திருத்தூதர் பணி 11: 21 – 26, 13: 1 – 3

ஸ்தேவான் கல்லெறிந்து கொல்லப்பட்ட பின்பு, கிறிஸ்தவர்களுக்கு எதிரான சித்ரவதைகள் அதிகமாயின. திருத்தூதர்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் யூதேயா மற்றும் சமாரியா பகுதிகளுக்கு தப்பியோடினர் (8: 1). ஆங்காங்கு சிதறுண்டவர்கள் அமைதியாக இல்லை. மாறாக, தாங்கள் சென்ற இடங்களிலேயே நற்செய்தியை அறிவித்து வந்தனர்(8: 4). குறிப்பாக, பிலிப் அன்னகர் ஒருவருக்கு நற்செய்தியை விளக்கிக்கூறுவதைப் பார்க்கிறோம்(8: 5 – 40). சவுலின் மனமாற்றம்(9ம்அதிகாரம்) மற்றும் புறவினத்து மக்களுக்கான பேதுருவின் நற்செய்திக்குப்பிறகு(10ம் அதிகாரம்), மீண்டும் எருசலேம் நோக்கி அனைவருடைய பார்வையும் திரும்புகிறது.

எருசலேமில் வாழ்ந்த யூத கிறிஸ்தவர்களுக்கு, புறவினத்து மக்களுக்கான தன்னுடைய நற்செய்தியையும், அவர்களின் மனமாற்றத்தையும் எடுத்துரைக்கிறார்(11: 18). ஸ்தேவானை முன்னிட்டு உண்டான துன்புறுத்தலால் மக்கள் பெனிசியா, சைப்பிரசு, அந்தியோக்கியா வரை சிதறிப்போயினர். (11: 19). அவர்கள் தாங்கள் சென்ற இடங்களில் நற்செய்தியை அறிவித்து வந்தனர். அவர்களது நற்செய்தியின் பொருட்டு, பெருந்தொகையான மக்கள் நம்பிக்கை கொண்டனர்(11: 21). யூதர்கள் அல்லாதவர்கள் கிறிஸ்துவைப் பற்றிய செய்தியை அறிவித்ததால் எப்படி, இத்தனை மக்கள் நம்பிக்கை கொண்டனர்? அவர்களின் வாழ்க்கைமுறை மக்கள் நடுவில் மிகுந்த நம்பிக்கையை அளிப்பதாக இருந்தது. எனவே தான், பல்லாயிரக்கணக்கான மக்கள் அவர்களின் செய்தியைக் கேட்டு, இயேசுவை ஏற்றுக்கொண்டார்கள்.

கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தினால், அவர் பயந்துவிடுவார்கள். ஓடிவிடுவார்கள் என்று நினைத்த அதிகாரவர்க்கம், அவர்கள் சென்ற இடங்களிலெல்லாம் விதைகளாகவே மாறிய நிகழ்வு, அதிகாரவர்க்கத்திற்கு கலக்கத்தையே கொடுத்திருக்கும். கட்டுவோர் விலக்கிய கல்லே கட்டிடத்திற்கு மூலைக்கல் ஆயிற்று என்கிற இறைவார்த்தைக்கேற்ப, சிதறுண்டவர்கள் நற்செய்தியில் மற்றவர்களை உறுதிப்படுத்தியது கடவுளின் வல்லமையினால் தான், என்பதை எவராலும் மறுக்க முடியாது.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.