இறைவனோடு இணைந்திருப்போம்

“எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக்குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்”. பொதுவாக, விலங்குகள் பலிபீடத்தில் காணிக்கையாக செலுத்தப்படும்போது, விலங்கு முழுவதையும் எரிபலியாக செலுத்துவதில்லை. மாறாக, எரிபலிக்கு அடையாளமாக, அந்த விலங்கின் சிறிய பகுதியை மட்டும் பயன்படுத்துவர். மீதி உள்ள இறைச்சியை பலிசெலுத்துகின்ற குருவும், பலியிட்ட குடும்பத்தாரும் பகிர்ந்து கொள்வர். ஒரு விலங்கு பலியிடப்படுகிறது என்றால், அதனுள் கடவுள் குடிகொண்டிருக்கிறார் என்பது பொருள். ஏனெனில் அது கடவுளுக்கு உரியது. கடவுளுடையது. அந்த விலங்கின் இறைச்சியை உண்ணும் மனிதருக்குள்ளும் கடவுள் குடிகொள்கிறார் என்பது அதனுடைய பொருள். இந்தப்பிண்ணனியில் இந்தப்பகுதியை நாம் பார்க்க வேண்டும்.

இது ஒருவேளை காட்டுமிராண்டித்தனமான செயலாகவோ, சிலைவழிபாடு போலவோ தெரியலாம். ஆனால், அதன் பிண்ணனியின் பொருள் தெரிந்தால், நம்மால் அதன் பொருளை நல்லமுறையில் புரிந்துகொள்ள முடியும். இங்கே சதை, இரத்தம் என்கிற வார்த்தையை நாம் இறைவார்த்தைக்கு ஒப்பிடலாம். ஆண்டவரின் வார்த்தையை நாம் தியானித்து அந்த வர்த்தையை உள்வாங்குகின்றபோது, இறைப்பிரசன்னம் நம்மை ஆட்கொள்கிறது. நாம் ஆண்டவரில் புதுப்பிக்கப்படுகிறோம். கடவுளோடு இணைந்திருக்கிறோம். கடவுளும் நம்மோடு இணைந்திருக்கிறார். கடவுள் நம்மோடு இணைந்திருக்கின்றபோது, நாம் புதிய மனிதர்களாக மாறுகிறோம். நம் வாழ்வு மாறுகிறது.

எபிரேயருக்கு எழுதிய திருமுகத்திலே 4: 12ல் ஆசிரியர் கூறுகிறார்: “கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது: இருபக்கமும் வெட்டக்கூடிய எந்த வாளினும் கூர்மையானது: ஆன்மாவையும் ஆவியையும் பிரிக்கும் அளவுக்கு குத்தி ஊடுறுவுகிறது”. கடவுளுடைய வார்த்தைக்கு அந்த அளவு ஆற்றல் இருக்கிறது. எனவே, நாம் ஆண்டவரின் வார்த்தை நம்மில் செயலாக்கம் பெற உறுதி எடுப்போம்.

~ அருட்பணி. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.