இறைவனோடு நாம் கொண்டிருக்கும் உறவு

”என் பெயரால் தந்தையிடம் கேட்பதையெல்லாம் அவர் தருவார்” என்று இயேசு சொல்கிறார். முன்பின் தெரியாத ஒருவர் நமக்கு அறிமுகமாகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருடனான நமது உறவு நமக்கு எப்படி இருக்கும்? அவரிடத்தில் ஒரு மரியாதை இருக்கும். அவருக்கும் நமக்கும் இடையே நமது உறவில் சிறிது மரியாதை இருக்கும். அதே நபரிடத்தில் நாம் நெருங்கி, நண்பர் என்ற நிலைக்கு வந்தபிறகு எப்படி இருப்போம்? அந்த இடைவெளி குறைந்திருக்கும். மரியாதையுடன் அன்பும், நட்பும் பிணைந்திருக்கும். எதையும் அவரிடத்தில் கேட்பதற்கோ, பேசுவதற்கோ நமக்கு கூச்சம் இருக்காது. கடவுளுடன், அப்படி ஒரு உறவுநிலைக்கு இயேசு நமக்கு அழைப்புவிடுக்கிறார்.

கடவுளைப்பார்த்து நாம் பயப்படத்தேவையில்லை. கடவுளை தந்தையாக, உற்ற நண்பராக நாம் பார்க்க வேண்டும். அந்த அன்பை நாம் உணர வேண்டும். அப்படி உணர்கிறபோது, நாம் வெளிப்படையாக இருப்பதற்கு கற்றுக்கொள்கிறோம். அவரிடத்தில் நம்மை ஒரு திறந்த புத்தகமாக காட்டுகிறோம். நமக்குத் தேவையானவற்றை நாம் கேட்கிறோம். நமக்கு அது கிடைக்குமா? கிடைக்காதா? என்பதைப்பற்றிய பயம் நமக்கு இருக்காது. நமக்கு தேவை என்றாலோ, அது வேண்டும் என்றாலோ நிச்சயம் அவர் தருவார் என்கிற நம்பிக்கை நமக்குள்ளாக இருக்கும். நாம் எப்படி எண்ணுகிறோமோ அப்படி அவரிடத்தில் பேசுகிறோம். அவரின் இதயம் அன்பு என்பது நமக்கு தெளிவாகிறது. நம் மட்டில் அவர் வைத்திருக்கிற அக்கறை உண்மையாகிறது.

கடவுளுடனான நமது உறவுநிலையை, இயேசு எதிர்பார்ப்பது போல அமைதல் வேண்டும். அந்த உறவுதான் கடவுளோடு நம்மை நெருங்கி வைக்கிற உணர்வு. அத்தகைய உணர்வு தான், நம்மை பயமில்லாமல் மகிழ்வோடு வாழவைக்கிற உணர்வு. எதையும் பார்த்து கவலைப்படாமல் கடவுளோடு நெருங்கி வாழ வைக்கிற உறவு. அத்தகைய உறவை நாம் வாழ, இயேசுவின் அழைப்புக்கு செவிமடுப்போம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.