இறைவன் தரும் ஆசீர்வாதம்

1அரசர்கள் 18: 41 – 46

நாம் வணங்கும் இறைவன் ஆசீர்வாதத்தின் கடவுள் என்கிற செய்தி, இன்றைய வாசகத்தின் மூலமாக நமக்கு வழங்கப்படுகிறது. நாடெங்கிலும் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் தண்ணீர் இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில், இறைவாக்கினர் எலியா, தன்னை அரசன் முன்னால் நிறுத்தி, உண்மையான இறைவன் யாவே இறைவன் என்பதையும், பாகால் இறைவன் பொய்யானவர் என்பதையும் நிரூபிக்கிறார். மக்கள் அனைவரும் கடவுளை உண்மையான இறைவனாக ஏற்றுக்கொள்கிறார்கள். அந்த தருணமே, அவர்களின் பஞ்சம் நீங்கியது என்பதை, இந்த வாசகத்தில் நாம் பார்க்கிறோம்.

பாகால் தெய்வத்திற்கான பலிபீடங்களையும், மதகுருக்களையும் கொன்றொழித்த பின்பு, மக்கள் ஆண்டவரை ஏற்றுக்கொள்கிறார்கள். பாவங்களை மன்னிக்கின்ற தேவன், இஸ்ரயேல் மக்களின் மனமாற்றத்தை எண்ணிப்பார்த்து மகிழ்ச்சியடைகிறார். அவர்களை பஞ்சத்தின் பிடியிலிருந்து விடுவிக்க திருவுளம் கொள்கிறார். இறைவன் மக்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று திருவுளம் கொண்டிருக்கிறவர். அவர்கள் துன்பப்பட வேண்டும் என்று ஒருபோதும் நினைப்பவர் கிடையாது. எனவே தான், மக்கள் அவரை விட்டு விலகிச் சென்றாலும் கூட, அவர் எப்போதும் அவர்களை தன்னிடத்தில் திரும்பி வரச் செய்வதற்கு முயற்சி எடுக்கிறார். அவர்களை எந்தெந்த வழிகளில், வடிவங்களில் தன்னால் ஆசீர்வதிக்க முடியுமோ, அந்த வகையில் ஆசீர்வதிக்க திருவுளம் கொள்கிறார்.

இறைவனின் அன்பை நாம் வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் முழுமையாக உணர்வதற்கு அழைக்கப்படுகிறோம். இறைவன் நல்லவர். வல்லவர். வாக்குமாறாதவர். நம்மை அன்பு செய்கிறவர். அனுதினமும் நம்மை எண்ணிப்பார்க்கிறவர். அந்த இறைவனிடத்தில் நாம் எப்போதும் உண்மையுள்ளவர்களாக, அவரிடத்தில் நம்பிக்கை உள்ளவர்களாக வாழ அருள்வேண்டி மன்றாடுவோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.