இறைவாக்கை வாழ்வோடு இணைப்போம்!

மத்தேயு நற்செய்தியில் இறுதிக்காலம் பற்றி வருகின்ற ஒரு பகுதியை இன்று வாசிக்கக் கேட்கிறோம் (மத் 24:37-44). இயேசுவின் இரண்டாம் வருகையை விழிப்போடு எதிர்பார்த்திருக்க வேண்டும் என்று இங்கே கிறிஸ்தவ சமூகத்திற்குச் செய்தி வழங்கப்படுகிறது. இதில் மூன்று சிறு உவமைகள் உள்ளன. அவற்றில் மானிட மகன் திடீரென்று, எதிர்பாராத நேரத்தில் வருவார் என்பது வலியுறுத்தப்படுகிறது. முதல் உவமை நோவா பற்றியது. அவருடைய காலத்தில் வாழ்ந்த மக்கள் அன்றாட செயல்களைச் செய்வதில் மூழ்கியிருந்தனர். அப்போது எதிர்பாராத விதத்தில் பெருவெள்ளம் வந்து அவர்களை அடித்துச்சென்றது.

கிறிஸ்தவ சமூகமும் அன்றாடக் கவலைகளில் மூழ்கியிருந்துவிட்டுத் தங்கள் வாழ்க்கையின் இறுதி நோக்கத்தை மறந்துவிடலாகாது. அவர்களுக்கு வழங்கப்படும் செய்தி: விழிப்பாயிருங்கள்! கிறிஸ்துவை அணிந்துகொண்டு, கிறிஸ்துவின் வருகைக்காகக் காத்திருப்பதே உங்கள் வாழ்க்கைக் குறிக்கோளாகும் என்பதை மறந்துவிடாதீர்கள்!

திருவருகைக் காலம் “எதிர்நோக்கிக் காத்திருக்கும்” காலம் ஆகும். எபிரேய மக்கள் மெசியாவின் வருகையை எதிர்பார்த்தனர் என்றும் அவர்களுடைய எதிர்பார்ப்புக்கள் இயேசு கிறிஸ்துவில் நிறைவேறின எனவும் நாம் அறிவோம். திருவருகைக் காலத்தில் இதை நாம் நினைவுகூர்கின்றோம். நம் வாழ்வு சார்ந்த எதிர்பார்ப்பும் திருவருகைக் காலத்தில் தெரிகிறது. மனிதரிடையே போரும் சண்டை சச்சரவும் மறைந்து அமைதி நிலவும் புதியதொரு காலம் மலரும் என்பது நம் எதிர்பார்ப்பு. கிறிஸ்துவின் வருகையால் இது நிகழும் என்பது நம் நம்பிக்கை. மனித வாழ்விலிருந்து இருள் மறைந்து ஒளி தோன்றும் என்பதும் நம் எதிர்பார்ப்பு. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கிறிஸ்துவின் வருகை உலகில் நிகழ்ந்தது. ஆனால், அவர் வரலாற்றின் இறுதியில் மீண்டும் வருவார். அந்த வருகைக்கு முன்னால் கிறிஸ்து நம் வாழ்விலும் நாம் வாழ்கின்ற சமூகத்தின் வாழ்விலும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. குறிப்பாக, நாம் கிறிஸ்துவை அருளடையாளக் கொண்டாட்டத்தில் சந்திக்கிறோம். நம்மை அடுத்திருப்போர் வழியாகவும் கிறிஸ்து நம்மைச் சந்திக்க வருகிறார். இவ்வாறு திருவருகைக் காலம் நமக்கு இயேசுவின் வெள்வேறு “வருகைகளை” நினைவுறுத்துகிறது. கிறிஸ்துவை நாம் சந்தித்து, அச்சந்திப்பின் வழியாக நம் வாழ்க்கை வளம் பெறவும், நம் இறுதிச் சந்திப்புக்கு நாம் என்றுமே தயாராக இருக்கவும் இத்திருவருகைக் காலம் நமக்குத் தூண்டுதலாக அமைய வேண்டும்.

~ அருட்திரு பவுல் லியோன்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.