இறை வல்லமையை நம்புவோம்

தீய ஆவிகளைப்பற்றி பலவிதமான நம்பிக்கைகளும், கதைகளும் யூத மக்களிடையே உலாவி வந்தது. யார் இந்த தீய ஆவிகள்? இவைகளின் பிறப்பிடம் என்ன? மூன்று வகையான கருத்துக்கள் தீய ஆவிகளைப்பற்றி உலாவி வந்தது. 1. மனிதர்களைப்போல அவைகளும் படைப்புக்கள் தான் என்கிற நம்பிக்கை மக்களிடத்தில் இருந்தது. 2. தீயவர்களாக வாழ்ந்தவர்கள் இறந்தபிறகும், அதே நோக்கத்தோடு அலைவதாகவும் நம்பிக்கை இருந்தது. 3. தொடக்க நூல் 6: 1 – 8 ல் சொல்லப்பட்ட நிகழ்வையும், தீய ஆவிகளோடுப் பொருத்திப்பார்த்தார்கள்.

இன்னும் பல கதைகள் தீய ஆவிகளைப்பற்றி மக்களிடையே இருந்து வந்தது. நாமும் இந்த தீய ஆவிகளைப்பற்றிய கதைகளை நம்பலாம், நம்பாமல் இருக்கலாம். நாம் நம்புகிறோமோ, இல்லையோ, இயேசு வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் முழுமையாக நம்பினார்கள். இந்த நற்செய்திப்பகுதியின் மூலமாக நாம் கற்றுக்கொள்ளும் செய்தி, கடவுளின் வல்லமையின் மீது நாம் நம்பிக்கை வைக்க வேண்டும். இன்றைய சமூகத்தில், சாத்தான் அனைவரையும் மிஞ்சியவன் என்கிற எண்ணம் இருக்கிறது. ஆலயத்திற்கு செல்கிறவர்களும், ஆண்டவரை நம்பிக்கையோடு வழிபடுகிறவர்களும் கூட, தீய ஆவிகள் மீது, அவற்றின் அதிகாரத்தின் மீது நம்பிக்கை வைக்கிறார்கள். ஆனால், நமது ஆண்டவர் தீய ஆவிகளின் மீதும் தனது அதிகாரத்தை நிலைநாட்டுகிறார். கடவுளின் வல்லமை பெரியது. அளப்பரியது.

கடவுளின் வல்லமை மீது நாம் நம்பிக்கை வைப்போம். கடவுள் ஆற்றல் நிறைந்தவர், அதிசயங்கள் புரியக்கூடியவர் என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். அந்த உறுதி தீய ஆவிகளுக்கு எதிரான நமது போராட்டத்தில் நமக்கு வெற்றி தேடித்தரும்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.