உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்

திருப்பாடல் 95: 1 – 2, 6 – 7, 8 – 9

கடினப்படுத்துவது என்றால் என்ன? ஒரு மனிதன் முதல்முறை தவறு செய்கிறபோது, அவனையறியாமலேயே குற்ற உணர்வு அவனை ஆட்கொள்கிறது. தவறு செய்து விட்டோமே என்று அவன் வேதனைப்படுகிறான். அந்த தருணத்தில் அவன் தவறிலிருந்து விடுபட வேண்டும். அந்த தருணத்தை அவன் தவறவிட்டு விட்டால், அதன் பிறகு அவனது குற்ற நடவடிக்கைகள் தொடரும். தவறு செய்வது அவனுக்கு பழக்கமாகிவிடும். அதுதான் கடின உள்ளம். தவறு செய்வதைப்பற்றிக் கவலைப்படாத உள்ளம். திருந்த நினைக்காத உள்ளம். இலக்கில்லாத உள்ளம்.

இஸ்ரயேல் மக்கள் இத்தகைய கடின உள்ளம் கொண்டிராதவாறு, கடவுள் அவ்வப்போது அவர்களை நினைவூட்டிக் கொண்டிருந்தார். கடவுளிடமிருந்து அவர்கள் ஏராளமான அருட்கொடைகளைப் பெற்றிருந்தாலும், அவர்கள் கடவுளை மறந்துவிட்டு, வேற்றுத்தெய்வங்களை நாடிச்சென்றனர். கடவுள் தங்களுக்குத் தேவையில்லை என்று நினைத்தனர். ஆனால், அதற்கான பலனை அவர்கள் அனுபவித்தபோது, மீண்டுமாக கடவுளைத் தேட ஆரம்பித்தனர். இது தொடர்ந்து கொண்டிருந்தது. இது கடின உள்ளமாக மாறுவதற்கான தொடக்கம். இந்த தொடக்கநிலையிலேயே இஸ்ரயேல் மக்கள் திருந்திவிட வேண்டுமென்று, ஆசிரியர் விரும்புகிறார். எனவே தான், இஸ்ரயேல் மக்களுக்கு அவர் அறிவுரை விடுக்கிறார்.

நம்முடைய வாழ்விலும் கடின உள்ள நிலைக்கு நாம் சென்று விடக்கூடாது. அதற்கு முன்னதாகவே நாம் திருந்தி வாழ வேண்டும். கடவுளுக்கு உகந்த வாழ்வை நாட வேண்டும். எப்போதும், கடவுள்பால் நம் உள்ளத்தை எழுப்பிக்கொண்டிருக்கும் வழிபாடுகளில் அக்கறையோடும், ஈடுபாட்டோடும் கலந்து கொள்ள வேண்டும்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.