உங்கள் உள்ளத்துக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.மத்தேயு 11 : 29

வானத்தையும், பூமியையும் உண்டாக்கிய ஆண்டவர் நம்மேல் அன்புகொண்டு, மனதுருகி நம்முடைய கஷ்டங்களையும், துன்பங்களையும் நீக்கிப்போட, நமக்கு சந்தோஷத்தையும், சமாதானத்தையும், தர நம்மை நோக்கி கூப்பிட்டு இவ்வாறு சொல்கிறார்.பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லோரும் என்னிடம் வாருங்கள் . நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும், மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது.” என்றார். மத்தேயு 11:28,29 ல் படிக்கிறோம்.

மேலும் ஆண்டவர் நமக்கு இவ்வாறாக வாக்கு அருளுகிறார். அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல. நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்; மருள வேண்டாம். யோவான் 14 : 27. இவ்வளவு அன்பும், மனதுருக்கமும் உள்ள ஆண்டவரின் பிள்ளைகளாகிய நாம் எதற்காக கவலைப்படவேண்டும். நமக்காக உயிரையே கொடுத்த கடவுள் நம்மோடு இருக்கும்பொழுது நாம் எதற்கு தேவையில்லாமல் கவலைப்பட வேண்டும்?துக்கப்படவேண்டும்? எல்லாவற்றையும் அவரின் சமூகத்தில் அவர் பாதத்தில் வைத்துவிட்டு அவருடைய செல்லப்பிள்ளைகளாய் நாம் இருக்க வேண்டும் என்றே ஆண்டவர் விரும்புகிறார்.

கடவுள் நம்மேல் வைத்த அன்பினால் நம்மை மீட்கவே இந்த உலகத்துக்கு வந்தார். நம்முடைய மீறுதல்களின் நிமித்தமும்,அக்கிரமித்தின் நிமித்தமும், பாவத்தின் நிமித்தமும், அவர் அடிக்கப்பட்டார், நொறுக்கப்பட்டார், காயப்பட்டார்.நமக்கு சமாதானம் அளிக்கும் பொருட்டே அவர்
அவருடைய உயிரையே சிலுவையில் நமக்காக தியாகப்பலியாக ஒப்புக்கொடுத்தார். இதை ஒவ்வொருநாளும் உணர்ந்து அவரையே நினைத்து அவர் பட்ட பாடுகளை தியானித்து அவர் சமுகத்தில் நம்இதயத்தை ஊற்றிவிடுவோம். அப்பொழுது எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானம் நம்முடைய இதயங்களில் அருளப்பட்டு நம்மை வழிநடத்தும்.

எங்களை மீட்க வந்த தெய்வமே!

உம்மை போற்றுகிறோம், துதிக்கிறோம். உமது அன்புக்கு ஈடு, இணை இந்த உலகத்தில் ஒன்றுமில்லை. நீரே உண்மையுள்ளவர், மாறாதவர் உமக்கே நன்றி பலிகளை ஏறேடுக்கிறோம் உமது கற்பனைகளையும், கட்டளைகளையும், கடைப்பிடித்து உமது நாமத்துக்கு என்றென்றைக்கும் பயந்து, கீழ்படிந்து நடக்க அனுதினமும் போதித்து வழிநடத்தும். நீர் தரும் இளைப்பாறுதலை பெற்றுக்கொள்ள உதவி செய்தருளும். மீட்பர் கிறிஸ்து இயேசுவின் இன்ப நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம் எங்கள் ஜீவனுள்ள தந்தையே!

ஆமென்! அல்லேலூயா!!.

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.