உண்மையை உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்வோம்

இன்றைய நற்செய்தி உண்மைக்கு சான்றுபகரக்கூடியவர்களுக்கு, உண்மைக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறவர்களுக்கு, உண்மையை தங்களது வாழ்வின் விழுமியமாக பிடித்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டு. தலைமைச்சங்கத்தின் நிர்வாகிகளாக இருக்கக்கூடிய தலைமைக்குருக்கள், மறைநூல் அறிஞர்கள் மற்றும் மூப்பர்கள் ஆகியோர் இயேசுவிடத்தில் கடினமான, கடுமையான ஒரு கேள்வியைக்கேட்கின்றனர். வெளிப்படையாகப்பார்த்தால், ஆம் என்றாலும், இல்லை என்றாலும், நமக்கு பாதகமாக முடியக்கூடிய கேள்வி. ஆனால், இயேசு அதை அசாதாரணமாக எதிர்கொள்கிறார்.

இயேசு உண்மைக்குச் சான்றுபகரக்கூடியவர். எனவே, அவரது மனதில் அச்சமோ, கலக்கமோ எதுவுமே இல்லை. அந்த கேள்வி கேட்கப்பட்டவுடன், என்ன பதில் சொல்லப்போகிறோமோ? என்று பயப்படவும் இல்லை. உண்மைக்காக வாழ்ந்து கொண்டிருக்கக்கூடியவர்களுக்கு இதுபோன்ற சோதனைகள் நிச்சயமாக வரும். ஆனால், முடிவு மகிழ்ச்சியானதாக இருக்கும். உண்மை என்று தெரிந்தும், அதன்படி வாழாமல், அதற்கு எதிராக வாழக்கூடியவர்கள், வலுவான அடித்தளத்தில் நின்று பேசுவது போல தோன்றும். ஆனாலும், அது அவர்களைப் பாதாளத்திற்கு இட்டுச்செல்லும்.

உண்மையின் நிமித்தம் ஒருவர் சந்திக்கக்கூடிய சோதனைகள், வாழ்வை எதிர்கொள்ள பயப்பட வைக்கிறது. எங்கே வாழ்க்கை துன்பமாகிவிடுமோ? என்ற அச்சம், உண்மைக்கு எதிரான வாழ்வை வாழத்தூண்டுகிறது. ஆனால், உண்மைக்காக வாழ்ந்தால், வெற்றி நிச்சயம் என்பது இயேசு நமக்குக் கற்றுத்தரும் பாடம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.