உன்னை அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்

நோவா ஆண்டவரின் வார்த்தைக்கு கீழ்படிந்து நடந்ததுபோல் ஆபிரகாம் ஆண்டவரின் வார்த்தையை அப்படியே நம்பினதால் ஆண்டவரின் சிநேகதரர் ஆனார்.ஏனெனில் ஆபிரகாமும் சாராவும் வயது முதிர்ந்த வர்களாய் இருந்தார்கள்.சாராவுக்கு மாதவிடாயும் நின்று போயிற்று.இந்த ஒரு சூழ்நிலையில் குழந்தை பிறக்கும் என்று சொல்கிறப்பொழுது யாரால்தான் நம்பமுடியும்?ஆனால் ஆபிரகாம் ஆண்டவர் சொன்னதை நம்பினார்.நம்பிக்கை என்பது கண்ணுக்கு புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை.எபிரேயர் 11:1.அவரின் உறுதியான நம்பிக்கையால் அதிசயத்தை கண்டார்.

அன்பானவர்களே! நாமும் ஆண்டவரின் வாக்கை நம்பி நாம் வேண்டிக்கொண்டதை ஆண்டவர் நமக்கு தருவார் என்று உறுதியாய் நம்பினால் நிச்சயம் நம் நம்பிக்கையை ஆண்டவர் கணப்படுத்துவார் . அதிசயத்தைக்காணச் செய்வார்.

நாம் நமக்கு கொடுக்கப்பட்ட பணியில் ( வேலையில் ) யோசேப்பை போல உண்மையாய் இருந்தோமானால் ஆண்டவர் செய்யும் அதிசயத்தை காணலாம். நாம் நம்முடைய செயல்கள் யாவற்றிலும் உண்மையாய் இருந்தால் ஆண்டவர் நம்மோடு கூடவே இருப்பார். தொ.நூல்.39:2ல் ஆண்டவர் யோசேப்புடன் உடன் இருந்ததுபோல் நம்மோடும் இருப்பார். அவரை அவரின் சகோதரர் பொறமைக்கொண்டு அடிமையாய் விற்ற போதிலும் யோசேப்பு உண்மையாய் இருந்ததால் ஆண்டவர் அவருடனே இருந்தார். எகிப்தில் அடிமையாய் இருந்த அவரை ஆண்டவர் உயர்த்தி எகிப்து தேசம் முழுவதற்கும் சிறப்பு பணியாளராகவும், வீட்டின் மேலாளராகவும் நியமித்து, தனக்கிருந்த அனைத்தையும் அவர் பொறுப்பில் பார்வோன் ஒப்படைத்தான் தொ.நூல் 39:4.

அப்படியிருந்த அவன்மேல் எகிப்து தலைவனின் மனைவி அவன் மேல் கண் வைத்து அவரை தவறான உறவுக்கு அழைத்த பொழுதும் அவன் அவளை நோக்கி என் தலைவர் எல்லாவற்றையும் என் பொறுப்பில் ஒப்படைத்து விட்டார். இந்த வீட்டில் என்னைவிட அதிகாரம் பெற்றவர் யாருமில்லை. நீங்கள் அவருடைய மனைவியாய் இருப்பதால் உங்களைத் தவிர வேறதையும் அவர் என்னிடம் ஒப்படைக்காமல் இல்லை. அப்படியிருக்க இந்த மாபெரும் தீச்செயலை செய்து கடவுளுக்கு எதிராகப் பாவம் செய்யலாமா? என்றார். அவள் தினம்,தினம் யோசேப்பை தொந்தரவு செய்த பொழுதும் அவர் கடவுளுக்கு பயந்து பொல்லாப்புக்கு விலகி தன் எஜமானுக்கு உண்மையாய் இருந்ததால் ஆண்டவரும் அவரோடு இருந்து எகிப்து நாடு முழுவதற்கும் அதிகாரியாக உயர்த்தி அதிசயம் காணும்படி செய்தார்.

இதைப்போல் மோவாபிய குடும்பத்தில் பிறந்த ரூத் என்ற பெண் தன் மாமியாரை தமது தாயைப்போல் நேசித்ததால் அவளின் அன்பின் நிமித்தம் ஆண்டவர் அவளை உயர்த்தி ஆசீர்வதித்து அவள் குலத்தில் நம்முடைய இயேசுகிறிஸ்துவே வந்து பிறக்கும் பாக்கியம்பெற அவளை ஆண்டவர் உயர்த்தி அதிசயம் காணும்படி செய்தார்.

இதைப்போல் குழந்தை இல்லாத அன்னாள் ஆண்டவரிடம் நம்பிக்கையேடு ஜெபித்து அந்த முதல் குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணித்ததால் குழந்தையே இல்லாத அவர்களுக்கு ஒரு குழந்தை
கொடுத்து அவர்களின் ஜெபத்தினால் மகிழ்ந்த ஆண்டவர் மேலும் ஐந்து குழந்தைகளைக் கொடுத்து அவர்களை ஆசீர்வதித்து உயர்த்தி அதிசயம் காணும்படி செய்தார்.இதுமாதிரி அநேக காரியங்கள் அநேக விஷயங்கள் சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆண்டவர் நம்முடைய கிழ்படிதலை விரும்புகிறார். நமது நம்பிக்கை யை காண்கிறார். நாம் பாவ இச்சைக்கு விலக வேண்டுமாய் விரும்புகிறார். நமது அன்பின் ஆழத்தை காண்கிறவராய் இருக்கிறார். நமது ஜெபத்தின் உறுதியை கண்டு மகிழ்கிறவராய் உள்ளார். இவற்றை எல்லாம் நாம் நம்முடைய வாழ்வில் கடைப்பிடித்தால் நிச்சயம் நாம் தினந்தோறும் அதிசயங்களை கண்டு மகிழலாம். நம் தேவைகள்யாவும் சந்திக்கப்படும்.

ஜெபம்

அன்பின் இறைவா! அதிசயங்களை காணச் செய்கிறவரே! உம்மை போற்றுகிறோம், ஆராதிக்கிறோம். நீர் சர்வ வல்லமை உள்ள தேவன். உம்மால் செய்யக் கூடாத காரியம் ஒன்றுமில்லை. நீர் விரும்பும் பிள்ளைகளாய் வாழ எங்களுக்கு அனுதினமும் போதித்து வழிநடத்தும். உமது தூய ஆவியானவர் எங்களோடு உடன் இருந்து நாங்கள் உமக்கு விரோதமாய் பாவம் செய்யாதபடிக்கு ஒவ்வொரு நொடிப்பொழுதும் எங்களை காத்து பரிசுத்தப் படுத்தி நீர் விறும்பும்படி வாழகற்றுத்தர வேண்டுமாய் மீட்பர் இயேசுகிறிஸ்துவின் இனிய பெயரால் வேண்டுகிறோம் எங்கள் பரம தந்தையே! ஆமென்!! அல்லேலூயா!!!

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.