உமது நீதியால் அவர்கள் மேன்மை அடைவார்கள்

திருப்பாடல் 89: 1 – 2, 5 – 6, 15 – 16

கடவுள் நீதியுள்ளவர் என்று விவிலியம் முழுமைக்குமாக பார்க்கிறோம். கடவுளுடைய நீதி இந்த உலக நீதி போன்றது அல்ல. ஏனென்றால், கடவுள் உள்ளத்தையும் ஊடுருவிப்பார்க்கக்கூடியவர். ஆராய்ந்து அறிந்து செயல்படக்கூடியவர். மனிதரைப்போன்று வெளித்தோற்றத்தை வைத்து, ஒருவரை தீர்ப்பிடக்கூடியவர் அல்ல.கடவுளுடைய நீதிக்கும் மனிதர்களுடைய நீதிக்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. மனிதர்கள் பதவிக்காக, பணசுகத்திற்காக, நீதி என்கிற பெயரில் அநீதியை வழங்கிக்கொண்டிருக்கிறார்கள். இங்கே யார் பணபலத்தில் சிறந்து விளங்குகிறார்களோ, அவர்கள் நீதியை தங்களுக்கு ஏற்ப வளைத்துவிடுகிறார்கள். ஆனால், கடவுளிடத்தில் அப்படி செய்ய முடியாது.

இந்த உலகத்தின் பார்வையில் இஸ்ரயேல் மக்களுக்கு நீதி என்பது கிடைக்க முடியாத ஒன்று. அவர்கள் நீதிக்காக போராட வலிமை படைத்தவர்களாகவும் இல்லை. நீதியைக் கேட்டுப்பெற்றுக்கொள்ளும் நிலையிலும் இல்லை. அவர்களுக்கு நீதி வழங்கக்கூடியவர்கள் யாரும் இல்லை. ஏனெனில் அவர்கள் சாதாரணமான மக்கள். எளிய மக்கள். அடித்தட்டு மக்கள். பாமர மக்கள். அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்றால், அது கடவுள் நீதிபதியாக இருந்தால் மட்டும் முடியும். அவர்கள் நீதியை பெறுவதற்கு தகுதியிருந்தாலும், இந்த உலகம் அவர்களுக்கு நீதி வழங்கவில்லை. ஏனெனில், வலியவர் மட்டுமே நீதியைப் பெற்றுக்கொள்ள முடியும். கடவுள் அவர்கள் சார்பாக இருப்பதனால், கடவுளின் நீதியை முன்னிட்டு அவர்கள் மேன்மை அடைவார்கள் என்று திருப்பாடல் ஆசிரியர் கூறுகிறார்.

கடவுள் சாதாரண, ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாக நின்று போராடக்கூடியவர். அவர்கள் பக்கம் இருந்து, அவர்களுக்கு நீதியைப் பெற்றுத்தருகிறவர். நமது வாழ்க்கையில் நாம் அநீதி செய்யாமல், கடவுள்பக்கம் இருக்கிறவர்களாக வாழ்வோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.