உமது பேரன்பினால் எனக்கு பதில் மொழி தாரும்

கடவுளின் மீது ஆழ்ந்த பற்றுறுதி கொண்ட ஒரு மனிதனின் ஏக்கத்தின் வெளிப்பாடு தான் இன்றைய திருப்பாடல். கடவுள் மீது பலரும் நம்பிக்கை வைத்திருக்கிறோம். அந்த நம்பிக்கை சிலருக்கு மேலோட்டமானதாக இருக்கிறது. ஒரு சிலருக்கு அது அதிக ஈடுபாடு கொண்டதாக இருக்கிறது. கடவுள் மீது தான் கொண்ட நம்பிக்கையின் வெளிப்பாட்டி காரணமாக, தன்னுடைய வாழ்வில் சந்தித்த மோசமான தருணங்களையெல்லாம் கடவுளிடம் சொல்லி, தன்னுடை ஏக்கத்தை வெளிப்படுத்துகிறார்.

இறைவனைக் கேள்வி கேட்பது தவறான ஒன்று. ஏனென்றால், அவர் நம்மைப் படைத்தவர். நமக்கென்று ஒரு சில வரைமுறை இருக்கிறது. ஒரு தந்தையிடம் கேள்வி கேட்க பிள்ளைகளுக்கு உரிமை இருக்கிறது. அதேவேளையில் அதற்கு ஓர் எல்லையும் இருக்கிறது. அந்த எல்லையை தான் மீறிவிடக்கூடாது, கடவுளின் கோபத்திற்கு ஆளாகி விடக்கூடாது என்கிற ஏக்கப்பெருமூச்சை வெளிப்படுத்தக்கூடிய பாடலாகவும் இது அமைந்துள்ளது. கடவுள் மீது நம்பிக்கை வைத்து, வாழ்ந்து கொண்டிருக்கிற மனிதர்கள் தங்களது வாழ்வில் சந்திக்கிற சோதனைகள் நிச்சயம் அதிகமாகத்தான் இருக்கும். இருந்தாலும் அதனையும் கடந்து, நம்பிக்கையாளர்களாக வாழ இந்த திருப்பாடல் நமக்கு அழைப்புவிடுக்கிறது.

கடவுள் மீது நாம் வைத்திருக்கிற நம்பிக்கை எப்படிப்பட்டதாக இருக்கிறது என்று சிந்தித்துப்பார்ப்போம். அது சாதாரணமான நம்பிக்கையாக இருந்துவிடக்கூடாது. மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டான ஒரு நம்பிக்கையாக அமைய இந்த திருப்பாடலை தியானிப்போம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.