உமது முக ஒளியை வீசச் செய்யும்

திருப்பாடல் 119: 129 – 130, 131 – 132, 133, 135

திருப்பாடல்களில் மிக நீளமான திருப்பாடல் இந்த திருப்பாடல். இது இருபத்திரெண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், எபிரேய மொழியில் இருக்கிற 22 எழுத்துக்களை இது குறிப்பதாக அமைந்திருக்கிறது. ஒவ்வொரு பத்தியும் எட்டு இறைவசனங்களை உள்ளடக்கியதாகக் காணப்படுகிறது. இந்த திருப்பாடல்களில் கடவுள் புகழ்ச்சியும், செப மனநிலையும், தீங்கிழைக்கிறவர்களுக்கு எதிரான விண்ணப்பங்களும் இடம்பெற்றிருக்கின்றன. இந்த திருப்பாடல் எந்வொரு குறிப்பிட்ட நிகழ்வுகளுக்குமாக எழுதப்பட்டிருக்கவில்லை. இது ஓர் ஆன்ம சிந்தனையை வெளிப்படுத்தும் பாடலாக அமைந்திருக்கிறது. குறிப்பாக, இளவயதினற்கான கற்பித்தலுக்காகவும், அவர்கள் கற்றுக்கொள்வதற்கும், மனப்பாடம் செய்வதற்கும் ஏற்றமுறையில் இது அமைந்திருக்கிறது.

கடவுளைப்பற்றிய புதிய அனுபவத்தைப்பெற இருக்கும் ஒருவரின் நியாயமான வேண்டுதலாக இந்த திருப்பாடல் அமைந்திருப்பது இதனுடைய சிறப்பு. ”உம் ஊழியன் மீது உமது முக ஒளியை வீசச் செய்யும்” என்கிற வரிகள், மேற்சொன்ன விளக்கத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு. கடவுளின் அருளைப்பெறுவதற்கான முயற்சியாக இந்த பாடல் வரிகள் அமைந்துள்ளன. கல்வி கற்பது என்பது கல்லாமை என்னும் இருளைப் போக்குவது. அதேபோல, கடவுளைப் பற்றிய அறியாமையைப் போக்கும் ஒரு விண்ணப்பமாக இந்த பாடல் அமைந்துள்ளது. கடவுளின் நியமங்களையும், சட்டங்களையும் மிக உன்னதமான உணர்வோடு கடைப்பிடிக்க விரும்பும் ஓர் ஆன்மாவின் பாடலாகவும் இது அமைந்துள்ளது.

கடவுளின் ஒழுங்குமுறைகளை நாம் வெறுப்புணர்வோடு அணுகக்கூடாது. மாறாக, கடவுளின் சட்டங்களும், ஒழுங்குகளும் நமக்கானது என்கிற உரிமையோடு, ஆவலோடு நாம் கடைப்பிடிக்க முயற்சி எடுக்க வேண்டும். ஆசை கொண்டிருக்க வேண்டும்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.