உம் முகத்தின் ஒளியில் அவர்கள் நடப்பார்கள்

திருப்பாடல் 89: 1 – 2, 15 – 16, 17 – 18

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழமொழி. முகம் என்பது ஒரு மனிதருக்கு முக்கியமானது. ஒருவருடைய முகத்தைப் பார்த்து தான் அவர் அழகானவராக இருக்கிறாரா? என்று முடிவு செய்கிறோம். ஒரு சிலருடைய முகம் இனிமையான முகமாக, பேசுவதற்கு தூண்டக்கூடிய முகமாக இருக்கிறது. ஒரு சிலருடைய முகம் எப்போதும் கோபம் படிந்த முகமாக தெரிகிறது. ஒரு சிலருடைய முகம் கவலை, சோகம் படிந்த முகமாக காட்சியளிக்கிறது. முகம் ஒரு மனிதரைப்பற்றிய பல செய்திகளை, அவருடன் பழகாமலேயே நமக்கு வெளிப்படுத்துகிறது. இன்றைய திருப்பாடலில், கடவுளின் முகத்தின் ஒளியில் கடவுளின் மாட்சிமையை அறிந்த மக்கள் நடப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.

ஒளி படர்ந்த முகம் நமக்குச் சொல்லக்கூடிய சிறப்புச் செய்தி ஒன்று இருக்கிறது. ஒருவனுக்கு எவ்வளவு கவலைகள், துன்பங்கள் இருந்தாலும், அவன் நேர்மையானவனாக இருந்தால், கடவுளுக்கு உண்மையானவனாக இருந்தால், எவ்வளவு சோதனைகள், சவால்கள் அவனுடைய வாழ்க்கையில் வந்தாலும், நிச்சயம் அவனுடைய முகம் ஒளிபடர்ந்ததாகவே இருக்கும். ஆக, தூய்மையான உள்ளம், தெளிந்த ஒளிரும் முகத்திற்கு அடையாளமாக இருக்கிறது. கடவுள் வல்லமை பொருந்தியவராக இருக்கிறார். ஒளிவீசக்கூடியவராக இருக்கிறார். ஏனெனில், அவர் தூயவராக இருக்கிறார். அவருடைய தூய்மை தான், மாட்சிமைக்கும், மேன்மைக்கும் அடித்தளமாக இருக்கிறது.

நம்முடைய வாழ்வில் நாமும் நமது உள்ளத்தை தூய்மையான எண்ணங்களால் நிரப்புவோம். தூய்மையான வாழ்க்கை வாழ்வோம். அப்போது நமது வாழ்வும், பலருக்கு ஒளி வீசி, சரியான பாதையில் நடக்க உதவியாக இருக்கும்.

– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.