உயர்த்தப்பட்டவரை உற்று நோக்கி

(யோவான் 3 : 7-15)

பழைய ஏற்பாட்டினை நிறைவு செய்பவர் நம் ஆண்டவர் இயேசு. மறைவாக இருந்த அனைத்திற்கும் நல்ல விளக்கத்தைக் கொடுத்ததோடு, தன்னிலே பலவற்றை வெளிப்படுத்தினார். இயேசு, தான் சாகும் முன்பே அவர் எவ்வாறு இறந்து மாட்சிமைப்படப் போகிறார் என்பதனை நிக்கதேம் என்ற பரிசேயரிடம் பேசிக் கொண்டிருப்பதே இன்றைய நற்செய்தி. பழைய ஏற்பாட்டிலுள்ள இந்த வெண்கலப் பாம்பு என்பது ஒரு அடையாளம். பாலைவனத்தில் மோசே தலைமையில் இஸ்ரயேல் இனம் பயணம் செய்த பொழுது நச்சுப் பாம்புகளால் கடிபட்டு இறந்தனர். அப்பொழுது மோசே வெண்கலத்தால் செய்யப்பட்டப் பாம்பை உயர்த்தி, அதைப் பார்ப்போர் பாம்பின் நஞ்சுக்குப் பலியாக மாட்டார் என்று உறுதி மொழிந்தார். இந்த நிகழ்வுக்கும் கல்வாரி நிகழ்வுக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது. விலக்கப்பட்ட மரத்தின் மூலமாக நுழைந்த பாவம் சிலுவை மரத்தின் மூலமாகக் கழுவப்படுகிறது. முதல் ஆதாமின் மூலமாகக் கீழ்ப்படிதல் இல்லாமையால் வந்த பாவமும் சாவும் இயேசுவின் கீழ்ப்படிதலாலும் சாவினாலும் அழிக்கப்படுகிறது. “ நானோ உலகின்று உயர்த்தப் பெற்றபின் அனைவரையும் என்பால் ஈர்த்துக் கொள்வேன்” என்ற ஆண்டவரின் வார்த்தை இன்றுவரை நிறைவேறிக் கொண்டே இருக்கிறது.

இயேசு நமது மீட்பர். அவரது இரத்தத்தால்தான் நமது பாவங்கள் கழுவப்பட்டன. தன்னையே சிலுவையில் பலியாக்கி விண்ணகத்தில் ஏறி மகிமையில் வீற்றிருக்கும் இயேசுவில் நம்பிக்கைக் கொள்ளும் எவரும் அழிவுறுவதில்லை. முடிவில்லா வாழ்வையும் பெற்றுக் கொள்வர்.

– திருத்தொண்டர் வளன் அரசு

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.