உரையாடல் உள்ளாடலாக !

(லூக்கா 24 : 13-35)

கத்தோலிக்கத் தாய்த் திரு அவையின் புதையல் நற்கருணை. நற்கருணையைச் சுற்றியே தான் நம் இருத்தலும் இயங்குதலும் நடைபெறுகின்றன. இந்த நற்கருணையின் மறைபொருளை உணர இன்றைய நற்செய்தி நமக்கொரு எடுத்துக்காட்டாக இருக்கின்றது. நமது திருப்பலியின் அமைப்பு முறையும் இன்றைய நற்செய்தியினைப் பார்த்துதான் அமைக்கப்பட்டிருக்கிறது என்றால் அது மிகையாகாது. முதல் பகுதி இன்றைய நற்செய்தியில் திருப்பலியின் இறைவார்த்தைப் பகுதியினை ஒத்து அமைகின்றது. இரண்டாம் பகுதி திருப்பலியின் நற்கருணைப் பகுதியினை ஒத்து அமைகின்றது.

நற்கருணைப் பகிர்விற்கான தயாரிப்பே இறைவார்த்தைப் பகிர்வு. இறைவார்த்தைப் பகுதியின் நோக்கமே நற்கருணையின் மறைப்பொருளை உணரச் செய்வதே. வார்த்தையானவர் மனுவுரு எடுத்ததே நம்மோடு தங்குவதற்குத்தானே! ஆனால் பல வேளைகளில் நம்மில் பலர் நற்கருணையில் இறைவனைக் காண முடியாதவர்கள்தான், இன்று இறைவார்த்தையில் இறைவனைக் கண்டுவிடலாம் என்று அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கிறோம். பழைய ஏற்பாட்டிலிருந்து புதிய ஏற்பாட்டினை நோக்கி பயணம் செய்வதை விட்டுவிட்டு, பழைய ஏற்பாட்டிலேயே இன்னும் பல பிரிவினையன்பர்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள். எவ்வாறு நடைப்பயணத்தில் இயேசுவைக் கண்டுகொள்ள முடியாமல் அவர்களது கண்கள் மறைக்கப்பட்டிருந்ததோ அதனைப்போல மறைக்கப்பட்டவாகளாக நாமும் வாழ வேண்டாம். நடைப்பயணத்தின் போது இயேசுவுக்கு எதுவும் தெரியாது என்று பிதற்றிக் கொண்டு வந்தார்களே அதனைப்போல எனக்கு எல்லாம் தெரியும் என்று பிதற்ற வேண்டாம். இயேசுவைப் பற்றி அறியும் அறிவு அவரைக் கண்டுணர நம்மை இட்டுச் செல்லட்டும்.

ஆம், இறைவார்த்தையினை அறிதல், (அவரோடு உரையாடுதல்) நற்கருணையில் அவரைக் காண (அவருடன் உள்ளாடல்) நம்மைத் தயாரிக்கட்டும். திருப்பலியைவிட தலைசிறந்த செபமும் இல்லை, செபக்கூட்டமும் இல்லை. சாதாரண அப்பத்தில் இறைவனைக் காண்பதைவிட தலைசிறந்த புதுமையில்லை, அவை தேவையுமில்லை.

– திருத்தொண்டர் வளன் அரசு

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.