உறவுகளின் முக்கியத்துவம்

இயேசு இந்த உலகத்தில் வாழ்ந்தபோது, அவருடைய உறவினர்களும், சகோதரர்களும் புரிந்து கொள்ளாதது நிச்சயம் மிகப்பெரிய வருத்தத்தை உண்டாக்கியிருக்க வேண்டும். நமக்கு எந்நாளும் உற்ற துணையாயிருக்கக்கூடிய நமது உறவுகள், நம்மை தவறாகப் புரிந்து கொள்கிறபோது, நிச்சயம் அது நமக்கு மிகப்பெரிய கவலையை உண்டாக்கும். இயேசுவும் இதற்கு விதிவிலக்காக இருந்திருக்க முடியாது. அவருடைய சகோதரர்கள் கூட அவரிடம் நம்பிக்கை கொள்ளவில்லை. மாற்கு நற்செய்தியாளரும் இதே கருத்தை வலியுறுத்துகிறார்.

மாற்கு 3: 21 ல் வாசிக்கிறோம்: ”இயேசுவுடைய உறவினர் இதைக்கேள்விப்பட்டு, அவரைப்பிடித்துக் கொண்டு வரச்சென்றார்கள். ஏனெனில் அவர் மதிமயங்கி இருக்கிறார் என்று மக்கள் பேசிக்கொண்டனர். பெரும்பாலான மக்கள் இயேசுவை மெசியாவாகவும், தங்களை மீட்க வந்தவராகவும், அதிசயங்கள், அற்புதங்கள் செய்கிறவராகவும், கடவுளின் மகனாகவும் பார்த்துக்கொண்டிருக்கிறபோது, தன்னுடைய உறவினர்கள் இவ்வளவு மோசமாக நடப்பதைப்பார்த்து, இயேசுவுக்கு நிச்சயம் கவலை வந்திருக்க வேண்டும். ஏனென்றால், உறவுகள் தான் மனித வாழ்வுக்கு அடிப்படை. உயரும்போது மகிழ்ச்சியடைவதும், கீழே விழும்போது தாங்கிப்பிடிப்பதும் இந்த உறவுகள். அந்த உறவுகளே தன்னை சரியாக புரிந்துகொள்ளவில்லை என்பது உண்மையிலே வருந்ததக்க ஒன்றாகும்.

உண்மை, நேர்மை போன்ற உறவுகளுக்கு துணைபோகிறவர்களாக, அதனைத் தாங்கிப் பிடிப்பதற்கு எதையும் இழக்கத்தயாராக இருக்கிறவர்களாக மாறுவோம். அதற்கா எத்தகைய துன்பங்கள் வந்தாலும், அதை ஏற்றுக்கொள்ள நம்மையே தயார்படுத்தி, இறையருள் வேண்டுவோம்.

~அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.