உறுதியான மனம்

திருத்தூதர்பணி 25: 13 – 21

வாழ்க்கையின் ”குறிப்பிட்ட தருணம்“ ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையையோ, ஒரு சமூகத்தின் பார்வையையோ, ஒட்டுமொத்த நாட்டின் போக்கையோ மாற்றக்கூடியதாக இருக்கும். அசோகருக்கு கலிங்கத்துபோர் அவரது வாழ்க்கையின் போக்கையே மாற்றியது. தூய பவுலடியாருக்கு, உயிர்த்த இயேசுவின் காட்சி, அவருடைய வாழ்வையே மாற்றியது. இந்திய சுதந்திரப்போரில் சிப்பாய்க்கலகம் இந்திய சுதந்திர வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இயேசுவின் வளர்ப்புத்தந்தை யோசேப்பின் வாழ்வில் அவர் கண்ட கனவு, மரியாளைப் பற்றிய பார்வையை மாற்றியது. இப்படி ஒரு குறிப்பிட்ட “தருணமானது“ ஒரு தனிப்பட்ட மனிதரின் வாழ்வையோ, ஒட்டுமொத்த சமூகத்தின் போக்கையோ மாற்றக்கூடியதாக இருக்கிறது. உலக வரலாற்றின் குறிப்பிட்ட முக்கிய தருணமானது, இயேசுவின் உயிர்ப்பே என்பதை ஆணித்தரமாக பவுலடியார் சொன்னது, இன்றைய வாசகத்தில் விளக்கப்படுகிறது.

பெஸ்தைச் சந்திக்க வந்த அகிரிப்பா, இரண்டாம் மார்க்கஸ் ஜீலியஸ் அகிரிப்பா ஆவார். இவர் அகிரிப்பாவின் மகனும் (12: 1 – 25), பெரிய ஏரோதுவின் கொள்ளுப்பேரனும் ஆவார். அவரோடு வந்த பெர்க்கியு, அவருடைய இளைய சகோதரி ஆவார். அலெக்சாண்டிரியாவின் சிறந்த தத்துவியலாளர் பிலோவின் உறவினரான, மார்கசுக்கு நிச்சயம் செய்யப்பட்டு, அவருடைய மாமாவான சால்சியர்களை ஆண்ட ஏரோதுவுக்கு மனைவியானாள். அவருடைய இறப்பிற்குப் பின், தன் சகோதரனிடத்தில் திரும்பி வந்தார். பெஸ்த், பவுலடியாரின் வழக்கைப் பற்றி, அகிரிப்பாவிடத்தில் கலந்து ஆலோசிக்கிறார். ”குற்றம் சாட்டப்பட்டவர் எவரும் குற்றம் சாட்டியவர்க்கு முன் நின்று, தம் மீது சுமத்தப்பட்ட குற்றத்தைப் பற்றி விளக்குவதற்கான வாய்ப்பைப் பெற வேண்டும். அதற்கு முன் தீர்ப்பளிப்பது உரோமையரின் வழக்கமல்ல” என்பது, பெஸ்துவின் வாதமாக இருந்தது. அது அவரைப்பொறுத்தவரையில் நீதியான வாதம். அதற்கு யூதர்களின் நடுவில் பெருத்த எதிர்ப்பு இருந்தபோதிலும், அதைப் பற்றி அவர் கவலைப்படவில்லை. தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார்.

ஒவ்வொருவருடைய வாழ்விலும், தங்களுக்கென்று விழுமியங்களை வைத்திருப்பார்கள். அந்த விழுமியங்கள் நம்முடைய பார்வையில் சரியானதாக இருக்கிறதா? என்பதை விட, கடவுளின் பார்வையில் சரியானதாக இருக்கிறதா? என்பது முக்கியமானது. நாம் கொண்டிருக்கிற மதிப்பீட்டை, எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும், வாழ்ந்து காட்ட வேண்டியது நம்முடைய கடமையாக இருக்கிறது. அதற்கு நாம் உறுதியுள்ள மனதுடையவர்களாக வாழ்வோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.