என்றும் வாழும் கடவுள் போற்றி

தோபித்து 13: 2, 3, 6, 7, 8

தோபித்து கடவுள் மீது முழுமையான நம்பிக்கை வைத்த ஒரு மனிதர். குறிப்பாக, உடல் ஒவ்வொன்றும் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டது. உடலுக்குரிய மதிப்பை வழங்க வேண்டுமென்று, இறந்த உடலை நல்லடக்கம் செய்வதற்காக தன்னுடைய வாழ்வை முழுமையாக அர்ப்பணித்தவர். அவர் கடவுள் மீது நம்பிக்கை கொண்டிருந்தார். அதனால், அவர் செய்யக்கூடிய காரியங்களால் அவருக்கு பிரச்சனை வரும் என்று தெரிந்தாலும் கூட, அதனைப் பற்றி கவலைப்படாமல் கடவுளைவிடாது பற்றிக்கொண்டவர். அவருடைய வாழ்வில் தான் செய்கிற ஒவ்வொரு செயலும் கடவுளைப் போற்றுவதாக அமைந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு வாழ்ந்தார்.

கடவுளைப் போற்ற வேண்டும் என்கிற எண்ணம் தான் இன்றைய பதிலுரைப்பாடலில் இடம்பெற்றிருக்கிற வரிகளில் வெளிப்படுகிறது. தோபித்தை பொறுத்தவரையில் கடவுள் இரக்கமும், நீதியும் உள்ளவர் என்பதை வலியுறுத்திச் சொல்கிறார். கடவுள் ஒரு மனிதன் செய்கிற செயல்களுக்கு ஏற்ப, நீதி வழங்குகிறவர் என்பதை அழுத்திச் சொல்கிறார். கடவுள் எப்போதும் தன்னை நம்பி வரக்கூடிய பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்குகிறார். அதேவேளையில் தீமை செய்கிறவர்களை அவர் தண்டிக்கிறார். எனவே, கடவுளின் கோபத்திற்கு ஆளாகாமல், கடவுளையும், அவரது பெயரையும் புகழ்ந்து உண்மையுள்ளவர்களாக வாழ, நமக்கு அழைப்புவிடுக்கின்றார்.

நம்முடைய வாழ்வில் கடவுளைப் போற்றுகிறவர்களாக வாழ்கிறோமா? கடவுள் நம்முடைய வாழ்வில் செய்கிற செயல்களுக்கேற்ப, நன்றியுணர்வோடு வாழ்கிறோமா? என்று சிந்தித்துப்பார்ப்போம். உண்மையுள்ளவர்களாக வாழ வேண்டிய அருள் வேண்டுவோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.