என்றென்றும் அவரைப் புகழ்ந்து போற்றுங்கள்

தானியேல்(இ) 1: 29, 30 – 31, 32 – 33
”என்றென்றும் அவரைப் புகழ்ந்து போற்றுங்கள்”

தானியேல் இணைப்புப் புத்தகத்தில் மூன்று இளைஞர்களைப் பற்றிய நிகழ்வை முதல் அதிகாரத்தில் வாசிக்கிறோம். அந்த மூன்று இளைஞர்கள் சாத்ராக்கு, மேசாக்கு, ஆபெத்நெகோ. இவர்கள் உண்மையான தெய்வமாகிய “யாவே“ இறைவனை வணங்கிக்கொண்டிருக்கிறவர்கள். வேற்றுத்தெய்வத்திற்கு ஆராதனை செலுத்த, அரசரால் வற்புறுத்தப்படுகின்றனர். அதற்கு மறுப்பு தெரிவிக்கும் இந்த இளைஞர்கள், கடவுளின் மாட்சியையும், மகிமையையும் புகழ்ந்து பாடுகிறார்கள். அதைத்தான் இந்த பாடல் நமக்கு உணர்த்துகிறது.

கடவுள் இன்றோ, நேற்றோ கண்டுபிடித்து வழிபடக்கூடியவர் அல்ல. மாறாக, பல தலைமுறைகளாக வழிபட்டு வரக்கூடிய கடவுள். இந்த கடவுள் அவர்களின் மூதாதையரின் கடவுள். அவர்களை பல தலைமுறைகளாக வழிநடத்தி வந்த கடவுள். இன்றைக்கு இஸ்ரயேல் மக்களின் உயர்வுக்கு அவர் தான் காரணமானவராக இருக்கிறார். கடவுளின் அன்பையும், அருளையும் பெற, இஸ்ரயேல் மக்கள் தகுதியற்றவர்களாக இருந்தும், கடவுள் அந்த தகுதியை அவர்களுக்கு வழங்கியிருக்கிறார். கடவுள் உண்மையாகவே போற்றுதற்குரியவர். இந்த பாடல் முழுவதும், மூன்று இளைஞர்களின் ஆழமான நம்பிக்கையையும், அவர்கள் கடவுள் செய்திருக்கிற அரும் செயல்களை நினைவிற்கொண்டு, நன்றியுணர்வுடன் வாழக்கூடியவர்களாகவும் இருப்பதை காண முடிகிறது.

கடவுள் மீது நாம் ஆழமான பற்றுறுதி கொள்ள வேண்டும். ஏனென்றால், அவர் நமது புகழ்ச்சிக்குரியவராக இருக்கிறார். கடவுள் நமக்கு செய்திருக்கிற எல்லா நன்மைகளையும் நாம் நன்றியுணர்வோடு நினைவிற்கொண்டு, அவருடைய மாட்சியையும், மகிமையையும புகழ்ந்தேத்துவோம்.
– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.