என் உள்ளம் உறுதியாயிருக்கின்றது

திருப்பாடல் 57: 7 – 8, 9 – 11
”என் உள்ளம் உறுதியாயிருக்கின்றது”

இந்த திருப்பாடல் ஒரு வித்தியாசியமான திருப்பாடல். தாவீது அரசரின் வாழ்க்கையில் மிகப்பெரிய நெருக்கடி. ஒரு கலக்கமான நேரம். அது மட்டுமல்ல சோதனையான நேரமும் கூட. கலக்கத்தையும், சோதனையையும் ஒரே நேரத்தில் அவர் வெற்றி கொள்ள வேண்டும். அந்த வேதனையான நேரத்தில் கடவுள் மீது நம்பிக்கை கொண்டு, அவரது உதவிக்காக இந்த பாடலைப் பாடுகிறார். கடவுள் மிக விரைந்து தனக்கு உதவி செய்ய வேண்டும் என்கிற வேண்டுதல் தான், இந்த திருப்பாடல்.

தாவீது அரசர் உண்மையிலேயே கடவுள் நம்பிக்கை உள்ளவர் என்பதற்கு பலவிதமான எடுத்துக்காட்டுக்களை நாம் பார்க்கலாம். தாவீது அரசர் மிகப்பெரிய பலவீனர்தான். வெகு எளிதாக தவறு செய்யக்கூடியவர் தான். கடவுள் அவருக்குச் செய்திருக்கிற செயல்களையெல்லாம், மிக விரைவாக மறந்து விடக்கூடியவர் தான். ஆனாலும், எல்லாவிதமான சோதனை, இக்கட்டுக்கள் நிறைந்த தருணங்களில் அவர், கடவுளின் உதவியையும், ஆலோசனையையும் எதிர்பார்க்கிறார். தான் எவ்வளவு தான் தவறுகள் செய்தாலும், நிச்சயம் கடவுள் தனக்கு உதவி செய்வார் என்கிற ஆழமான நம்பிக்கை தாவீது அரசரிடத்தில் இருந்தது மிக்ப்பெரிய ஆச்சரியம். அது தாவீது அரசரின் தனிப்பெரும் பண்பு என்று கூடச் சொல்லலாம். அந்த நம்பிக்கையும், விசுவாசமும் இன்றைய பாடலில் வெளிப்படுகிறது.

நமது வாழ்வின் சோதனை, நெருக்கடி, இக்கட்டான வேளைகளில் நாம் தாவீது அரசரிடம் கற்றுக்கொள்ளக் கூடிய பாடங்கள் அதிகமாக இருக்கிறது. எந்த சூழ்நிலையிலும், நாம் எவ்வளவு தான் பலவீனர்கள், பாவிகள் என்றாலும், கடவுள் நம்மை கரம் தூக்கி விட தயாராக இருக்கிறார். அந்த கடவுளிடம் நாம் வைத்திருக்கிற விசுவாசத்தில் உறுதியாக நிலைத்திருப்போம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.