என் நெஞ்சம் தாகம் கொண்டுள்ளது

விசுவாச வாழ்விற்கும், உலக வாழ்விற்கும் இடையேயான போராட்டத்தை மிக தெளிவாக எடுத்துக்காட்டுவதுதான் இன்றைய திருப்பாடல்(திருப்பாடல் 42: 1 – 2, 43: 3, 4). இந்த உலக வாழ்க்கையின் ஏமாற்றங்கள், தோல்விகள், விரக்தி, பயம் விசுவாச வாழ்விற்கான சவாலாக தென்படுகிறது. ஆனால், இவையனைத்தையும், விசுவாசம் என்கிற ஆன்மீக ஆற்றல் ஒன்றுமில்லாததாக மாற்றிவிடுகிறது. பிரச்சனைகள் இருந்தாலும், அவற்றை எதிர்கொள்வதற்கு தேவையான ஆற்றலையும், அதனை பொருட்படுத்தாமல் கடவுள் மீது கொண்டுள்ள நம்பிக்கையில் ஆழப்படவும் இது நமக்கு உதவியாக இருக்கிறது.

கடவுள் மீது எப்போது நமக்கு ஈடுபாடு, ஆர்வம், தாகம் ஏற்படுகிறதோ, அப்போதுதான் விசுவாசம் நமக்குள்ளாக தோன்ற ஆரம்பிக்கிறது. வாழ்க்கையில் வரக்கூடிய எந்தவித பிரச்சனைகளையும் எதிர்கொள்வதற்கு இது நமக்கு உதவியாக இருக்கிறது. கடவுள் மீது நமக்கு ஈடுபாடே இந்த பிரச்சனைகளோடு தான், தோன்ற ஆரம்பிக்கிறது. பிரச்சனைகளின் தொடக்கத்தில், எதையும் நம்மால், தனி ஆளாக எதிர்கொள்ள முடியும் என்று நாம் நினைக்க ஆரம்பிக்கிறோம். நம்முடைய பலத்தில் நாம் நம்பிக்கை கொள்ள ஆரம்பித்துவிடுகிறோம். ஆனால், அந்த பிரச்சனைகளைத் தீர்ப்பதில் நாம் தோல்வியடைகிறபோது, கடவுள் மீது நமக்கு இயல்பாகவே நம்பிக்கையும், விசுவாசமும் தோன்ற ஆரம்பிக்கிறது. அதுதான் உண்மையான விசுவாசம். நாமாக கற்றுக்கொள்கிற விசுவாசம். அந்த விசுவாசம் என்றுமே அழியாத விசுவாசம். இந்த உலக வாழ்விலிருந்து நம்மைப் பிரித்து, முழுவதுமாக ஆன்மீக வாழ்விற்குள்ளாக, கடவுளுக்குள்ளாக நம்மை கொண்டு செல்லும் விசுவாசம். அந்த விசுவாசத்தைப் பெற்றுக்கொள்ள நாம் முயற்சி எடுக்க வேண்டும் என்று ஆசிரியர் அழைப்புவிடுக்கின்றார்.

நமது வாழ்க்கையில் பிரச்சனைகள் தோன்றுகிறபோது, நிச்சயம் நமது விசுவாச வாழ்விற்கு அது மிகப்பெரிய பலத்தைக் கொடுக்கும். அந்த தருணத்தில் கடவுள் மீது நாம் கொண்டிருக்கிற விசுவாசம் ஆழப்பட நமக்கு உதவியாக இருக்கும். அந்த விசுவாசத்தைப் பெற்றுக்கொள்ள நாம் நம்மையே தயார்படுத்துவோம்.

~  அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.