என் நெஞ்சே! நீ ஆண்டவரைப் போற்றிடு!

திருப்பாடல் 146: 1 – 2, 5 – 6, 7, 8 – 9

மனிதன் கடவுளுக்கு எதிராக பல தவறுகளைச் செய்ததினால், அவனுடை கீழ்ப்படியாமையினால் அருள் வாழ்வை இழந்தான். தன்னுடைய நிலைக்கு தானே தான் பொறுப்பேற்க வேண்டிய நிலைக்கு மனிதன் தள்ளப்பட்டான். ஆனாலும், கடவுள் அவனை நிர்கதியாக விட்டுவிடவில்லை. அவன் மீது தான் இன்னும் அன்பாயிருக்கிறேன் என்பதை, பலவிதங்களில் வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கிறார். கடவுளின் அன்பிற்கான வெளிப்பாடு தான், இன்றைய திருப்பாடல்.

இன்றைய திருப்பாடலில், கடவுள் இந்த உலகத்தை மீட்பதற்காக எடுக்கும் முயற்சியின் போது நிகழும், ஒரு சில அடையாளங்களை திருப்பாடல் ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார். கடவுள் மெசியாவை நிச்சயம் அனுப்புவார் என்று அனைவரும் எதிர்பார்த்திருக்கிற வேளையில், மெசியா வந்தால், இதுதான் மெசியாவின் காலம் என்பதை எப்படி அறிந்து கொள்வது? என்பதற்கான விளக்கம், இந்த பாடலில், கொடுக்கப்படுகிறது. எதிர்காலத்தில் நிகழவிருப்பதை, முன்கூட்டியே வெளிப்படுத்துகின்ற இறைவாக்குப்பணியை, இந்த திருப்பாடல் அறிவிக்கிறது. மெசியா வருகிறபோது, குருடர்கள் பார்வை பெறுவர், தாழ்ந்த நிலையில் இருக்கிறவர்கள் உயர்வு அடைவர். கடவுள் அனைவருக்கும் உரியவர் என்கிற உண்மை வெளிப்படும் என்பது, இங்கே சுட்டிக்காட்டப்படுகிறது. இது கடவுளின் அன்பை வெளிப்படுத்தக்கூடிய திருப்பாடலாக அமைகிறது.

இன்றைக்கு கடவுளை விட்டு, நாம் எவ்வளவு தான் விலகிச் சென்றாலும், கடவுள் நம்மை விட்டு விலகாதவராக இருக்கிறார். நம்மை முற்றிலுமாக அன்பு செய்யக்கூடியவராக இருக்கிறார். அந்த அன்பிற்கு நம்மையே முற்றிலும் தகுதியுள்ளவர்களாக நாம் வாழ்வோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.