என் நெருக்கடி வேளையில் நான் ஆண்டவரிடம் மன்றாடினேன்

திருப்பாடல் 18: 1 – 2a, 3, 4 – 5, 6
”என் நெருக்கடி வேளையில் நான் ஆண்டவரிடம் மன்றாடினேன்”

அழுகையின் இறைவாக்கினர்“ என்று எரேமியாவைச் சொல்வார்கள். தாவீதிற்கும் இந்த அடைமொழி முற்றிலுமாகப் பொருந்தும். ஏனென்றால், அவரது உள்ளத்துயரத்தின் வெளிப்பாடே, அவர் எழுதிய திருப்பாடல்கள். இந்த திருப்பாடலும், தாவீதின் கலக்கத்தை வெளிப்படுத்தக்கூடிய திருப்பாடல். தன்னுடைய கவலையை அவர் பாடலாக வடிக்கிறார். துயரத்தோடு தொடங்குகிற அவரது பாடல், மகிழ்ச்சியில் முடிவடைகிறது. இந்த பாடல், சாமுவேல் புத்தகத்தில் வருகிற அன்னாவின் பாடலோடு இணைந்த ஒன்றாக இருக்கிறது. அன்னாவும் தன்னுடைய வேதனையை, பாடலின் தொடக்கத்தில் குறிப்பிடுகிறார். நேரம் செல்லச்செல்ல அவரது வேதனை அதிகரிக்கிறது. இறுதியில் கடவுளின் மாட்சிமையை வலிமையாக உணர்த்தி அது நிறைவடைகிறது. அந்த பாணி, இந்த பாடலிலும் காணப்படுகிறது.

இந்த உலகத்தில் நமக்கென்று இருக்கிற ஒரே ஆறுதல், ஆதரவு கடவுள் மட்டும்தான். நமக்கென்று ஏராளமான நண்பர்கள் இருந்தாலும், உயிர் நண்பர் என்று ஒருவர் மட்டும் தான் இருக்க முடியும். அவரும் ஒரு குறிப்பிட்ட தூரம் வரை தான், நம்மோடு துன்பத்தில் பயணிக்க முடியும். குறிப்பிட்ட தூரத்திற்கு பிறகு அவரால், நம்மோடு இணைந்து வர முடியாது. அந்த நேரத்தில் நாம் தனியாக விடப்படுகிறோம். இந்த அனுபவம் எல்லோரும் வாழ்க்கையில் பெறக்கூடியது. இத்தகைய துன்ப நேரத்திலும், நெருக்கடியான வேளையிலும் நமக்கு உற்ற தோழனாக, துணைவராக இருக்கக்கூடிய கடவுள் ஒருவர் மட்டும் தான் என்று ஆசிரியர் கூறுகிறார். எனவே, நெருக்கடியான வேளையில் ஆண்டவரைத் தேடுவதற்கு இந்த திருப்பாடல் நமக்கு அழைப்புவிடுக்கிறது.

நம்மோடு உடன்பயணிக்கக்கூடிய கடவுள் எப்போதும் இருப்பதனால், நாம் எதிர்காலத்தை நினைத்தோ, நமது வாழ்க்கையை நினைத்தோ கவலைப்படத் தேவையில்லை. நம்பிக்கையோடு நமது நாட்களை நாம் நகர்த்துவோம். எல்லாச்சூழ்நிலையிலும் நம்மோடு இருக்கிற கடவுள், நிச்சயம் நம்மை பாதுகாப்பார்.
– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.