என் மீட்பராம் ஆண்டவரில் என் இதயம் அக்களிக்கின்றது

எல்கானாவுக்கு இரண்டு மனைவியர். அன்னா, பெனின்னா. அன்னாவுக்கு குழந்தை கிடையாது. எனவே, பெனின்னா அன்னாவை இகழ்ச்சியோடு நோக்கினார். பழைய ஏற்பாட்டில், குழந்தை இல்லாத நிலை, சாபமாகக் கருதப்பட்டது. அன்னா தன்னுடைய உள்ளக்கிடக்கையை ஆண்டவரிடத்தில் கொட்டித்தீர்த்தார். தன்னுடைய இகழ்ச்சியைப் போக்குமாறு வேண்டுகிறார். அவருடைய நம்பிக்கை வெற்றி பெறுகிறது. ஆண்டவர் அவர் மீது அருள்கூர்ந்தார். அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுக்கிறார். தன்னுடைய இழிநிலையைப் போக்கிய அன்னாவின் மனம், மகிழ்ச்சியடைகிறது. அந்த மகிழ்ச்சியின் நிறைவில் பாடுகிற பாடல் தான், இன்றைய திருப்பாடல் (சாமுவேல் 2: 1, 4 – 5, 6 – 7, 8).

அன்னாவின் இந்த பாடல், எல்லாவற்றிற்கும் இறைவன் தான் காரணராகயிருக்கிறார் என்று, அவர் வைத்திருக்கிற நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. ஆண்டவரால் எல்லாம் முடியும் என்பதுதான் இந்த பாடலின் சிந்தனையாக இருக்கிறது. எனவே தான், இந்த பாடல், புதிய ஏற்பாட்டில் அன்னை மரியாளால் பாடப்படுகிறது. ஆண்டவர் நீதியுள்ளவராக இருக்கிறார். அவர் விரும்பினால் ஒருவரை செல்வராக்குகிறார். அந்த நிலைக்கு அவர் தகுதியில்லை என்றால், ஏழையாக்குகிறார். ஒருவருக்கு உயிர் தருகிறவரும் ஆண்டவரே, என்கிற நம்பிக்கையை ஆழமாக, அன்னா எடுத்துரைக்கிறார். இந்த வரிகள் அனைத்துமே, தன்னுடைய வாழ்வில் அன்னா அனுபவித்த உண்மை. அதைத்தான், இங்கே பாடலாக வெளிப்படுத்துகிறார்.

நம்முடைய வாழ்விலும், கடவுளைப் பற்றிய இந்த நம்பிக்கை நம்முடைய உள்ளத்தில் இருக்க வேண்டும். எது நடந்தாலும் ஆண்டவரால் என்னை மீட்க முடியும், ஆண்டவரால் என்னை காப்பாற்ற முடியும் என்கிற நம்பிக்கை இருக்கிறபோது, வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சியாக வாழலாம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.