என் மீட்பும் மேன்மையும் கடவுளிடமே இருக்கின்றன

திருப்பாடல் 62: 5 – 6, 8

இந்த திருப்பாடல் செபமாகவோ, புகழ்ச்சிபாடலாகவோ இருக்கலாம். அது உறுதியாகத் தெரியவில்லை. எந்த சூழலில் எழுதப்பட்டது என்பதும் உறுதியாகவில்லை. சோகமான சூழலிலா? அல்லது மகிழ்ச்சியான வேளையா? என்பதும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், திருப்பாடல் ஆசிரியர் கடவுள் மீது வைத்திருக்கிற நம்பிக்கை மட்டும் இங்கே அதிகமாக வெளிப்படுத்தப்படுகிறது. ”எக்காலத்திலும் அவரையே நம்புங்கள்” என்று, ஆசிரியர் விடுக்கிற அழைப்பு இதனை உறுதிப்படுத்துவதாக அமைகிறது.

கடவுளின் அருளும், வல்லமையும் நம் வாழ்வில் வெளிப்பட நாம் காத்திருக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறார் திருப்பாடல் ஆசிரியர். நாம் எதிர்பார்க்கிற நேரத்தில் கடவுளின் அருளைப் பெற்றுக்கொள்ள முடியாது. மாறாக, கடவுள் விரும்புகிற நேரத்தில், அதிலும் சிறப்பாக நமக்குத் தேவையான நேரத்தில் கடவுளின் வல்லமை வெளிப்படும். இதுதான் கடவுள் மட்டில் நாம் வைத்திருக்கிற நம்பிக்கையின் வெளிப்பாடு. அந்த நம்பிக்கையிலிருந்து நாம் சிறிதும் அடிபிறழக்கூடாது. அந்த நம்பிக்கையில் நாம் நிலைத்திருக்க வேண்டும். அதுதான் ஆசிரியர் விடுக்கிற அழைப்பாக இருக்கிறது.

நம்முடைய வாழ்வில் இத்தகைய நம்பிக்கை இருக்கிறதா? என்று சிந்தித்துப் பார்ப்போம். எதிர்பார்ப்பு இருப்பது நல்லதுதான். அதேவேளையில் கடவுள் நம்பிக்கையும் நமக்கு அவசியமான ஒன்றாக இருக்கிறது. அந்த நம்பிக்கையில் வாழ்வதற்கு இறைவனின் ஆசீர் வேண்டி மன்றாடுவோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.