எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக

திருப்பாடல் 147: 12 – 13, 14 – 15, 19 – 20

ஆண்டவர் யார்? ஆண்டவர் எப்படிப்பட்டவர்? என்பதை, இந்த திருப்பாடலானது நமக்கு விளக்கிச் சொல்வதாக அமைந்திருக்கிறது. இஸ்ரயேல் மக்கள் கடவுளைப் போற்றுவதற்கான காரணத்தை இது விளக்குவதாகவும் இருக்கிறது. இஸ்ரயேல் மக்களை ஒட்டுமொத்தமாக இணைந்து, கடவுளைப் புகழ்ந்து பாடச்சொல்கிறார் திருப்பாடல் ஆசிரியர். ஏனென்றால், கடவுள் இஸ்ரயேல் நாட்டின் பிள்ளைகள் அனைவருக்கும் ஆசீர் அளிக்கிறார். கேட்டதால் கொடுக்கவில்லை. மாறாக, அவராகவே ஆசீர்வாதத்தைத் தருகிறார்.

இஸ்ரயேல் மக்களை எல்லாவிதத்திலும் வழிநடத்தக்கூடிய தலைவராக, அரசராக, ஆயராக இறைவன் இருக்கிறார். இஸ்ரயேல் மக்களுக்கென்று இந்த உலகத்தில் அரசர்கள் இருந்தாலும், அவர்களை வழிநடத்துகிறவர் ஆண்டவர் ஒருவரே. அவர் மக்களுக்கு ஒழுங்குமுறைகளையும், ஒழுக்கத்தையும் கற்றுக்கொடுக்கிறார். இவற்றை அவர் மற்றவர்களுக்குச் செய்யவில்லை. இஸ்ரயேல் மக்களுக்கு மட்டும் செய்கிறார். எப்படியாவது இஸ்ரயேல் மக்களை உருவாக்கி, இந்த உலகத்தார் நடுவில் பெருமைப்படுத்தி, அவர்கள் வழியாக இந்த உலகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்பது இஸ்ரயேல் மக்களுக்காக, கடவுள் உருவாக்கிய திட்டமாக இருந்தது. அது இந்த திருப்பாடலில் வெளிப்படுகிறது.

இறைவன் நம்மை நேரிய வாழ்வு வாழ வேண்டும் எனவும், அவருக்குகந்த வாழ்வு வாழ வேண்டும் எனவும் எதிர்பார்க்கிறார். அப்படி நம்முடைய வாழ்வை அமைத்துக்கொள்வதுதான் அவருக்கு மகிழ்ச்சியையும், ஆனந்தத்தையும் தரக்கூடியதாக இருக்கிறது. இறைவனை மகிழ்ச்சிப்படுத்தவும், மகிமைப்படுத்தவும் அவருக்குகந்த வாழ்க்கை வாழ்வோம்.
– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.