எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக!

திருப்பாடல் 147: 12 – 13, 14 – 15, 19, 22

எருசலேம் என்று இங்கே குறிப்பிடப்படுவது இஸ்ரயேல் மக்களை குறிக்கக்கூடிய சொல்லாகும். கடவுள் இஸ்ரயேல் மக்களுக்குச் செய்து வந்திருக்கிற எல்லா மேன்மை மிகு செயல்களையும் ஆசிரியர் சொல்கிறார். இஸ்ரயேல் மக்களை மற்ற நாட்டினரோடு ஒப்பிட்டுப்பேசுகிறார். மற்ற நாட்டினரோடு ஒப்பிட்டுப் பேசுகையில், கடவுள் இஸ்ரயேல் மக்களுக்கு பலவிதமான நன்மைகளைச் செய்திருப்பதை ஒருவர் உணர்ந்து கொள்ள முடியும்.

இஸ்ரயேல் மக்களை பெரும் ஆபத்திலிருந்து காப்பாற்றியிருக்கிறார். பகைநாட்டினரிடமிருந்து அவர்களை பாதுகாப்பாக வழிநடத்தியிருக்கிறார். அவர்களுக்கு மிகப்பெரிய நன்மைகளையெல்லாம் செய்திருக்கிறார். இஸ்ரயேல் மக்கள் வழியாக, கடவுள் எவ்வளவுக்கு மேன்மைமிக்கவர் என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்வதற்காகவே இதை கடவுள் செய்தார். ஆனால், கடவுளிடமிருந்து ஏராளமான நன்மைகளைப் பெற்றுக்கொண்ட இஸ்ரயேல் மக்கள், அதற்கேற்ப தங்களது வாழ்வை அமைத்துக்கொள்ளவில்லை. அவர்கள் கடவுளை விட்டு விலகிச்சென்றார்கள். அவருக்கு விரோதமான காரியங்களைச் செய்து, பாவம் செய்தார்கள். கடவுளை தங்களது செயல்களால் பழித்துரைத்தார்கள். இப்படிப்பட்ட தவறான வாழ்விலிருந்து, கடவுள் பக்கம் வர வேண்டுமென்று ஆசிரியர் மக்களுக்கு அழைப்புவிடுக்கின்றார்.

கடவுள் எப்போதும் நமக்கு நன்மைகளையே செய்து கொண்டிருக்கிறார். அவர் நாம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக அனுதினமும் பல வல்ல செயல்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். அந்த இறைவனிடம் நாம் நம்மையே முழுமையாக ஒப்புக்கொடுத்து, நன்றியுள்ளவர்களாக வாழும் அருள் வேண்டுவோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.