எல்லா வேண்டல்களையும்,மன்றாட்டுகளையும் இறைவனிடம் எழுப்புங்கள்.எபேசியர் 6:18

ஆண்டவரோடு இணைந்து அவர் தரும் வலிமையாலும் ஆற்றலாலும் வலிவூட்டப்பெறுங்கள். ஏனெனில் சாத்தானின் சோதனைகளால் மனம் சோர்ந்து விடுவோம். அலகையின் ஏமாற்று வழிகளை எதிர்த்து நிற்கும் வலிமைபெறும்படி கடவுள் அருளும் எல்லாப் படைக்கலன்களையும்
அணிந்து கொள்ளுங்கள். ஏனென்றால் நாம் மனிதர்களோடு மட்டும் போராடுவதில்லை. ஆட்சிபுரிவோர்,அதிகாரம் செலுத்துவோர், இருள் நிறைந்த இவ்வுலகின்மீது ஆற்றல் உடையோர் வான்வெளியிலுள்ள தீய ஆவிகள்,ஆகியவற்றோடும் போராடுகிறோம்.எபே 6:10 to 12.

எனவே பொல்லாத நாள் வரும்போது, எதிர்த்து நின்று அனைத்தின்மீதும் வெற்றிபெற்று நிலைநிற்க வல்லமை பெறும்படி கடவுள் அருளும் எல்லாப் படைக்கலன்களையும் எடுத்துக்கொள்ளுங்கள். ஆகையால் உண்மையை இடைக்கச்சையாகக் கட்டிக்கொண்டு, நீதியை மார்புக் கவசமாக அணிந்து நில்லுங்கள். அமைதியை அருளும் நற்செய்தியை அறிவிப்பதற்காக உங்கள் காலில் ஆயத்த நிலையை மிதியடிகளாக போட்டுக்கொள்ளுங்கள். எந்நிலையிலும் நம்பிக்கை என்னும் கேடயத்தைப் பிடித்துக்கொள்ளுங்கள். அதைக்கொண்டு தீயோனின் தீக்கணைகளையெல்லாம் அணைத்து விட முடியும். ஆண்டவர் அருளும் மீட்பைத் தலைச் சீராகவும், கடவுளின் வார்த்தையைத் தூய ஆவிஅருளும் போர்வாளாகவும் எடுத்துக்கொள்ளுங்கள்.

எல்லா வேண்டல்களையும்,மன்றாட்டுகளையும் இறைவனிடம் எழுப்புங்கள். எப்போதும் தூய ஆவி துணைக்கொண்டு வேண்டுதல் செய்யுங்கள். இதில் உறுதியாய் நிலைத்திருந்து விழிப்பாயிருங்கள். இறைமக்கள் அனைவருக்காகவும் மன்றாடுங்கள். அப்பொழுது நாமும் ஆண்டவரின் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு எல்லா போராட்டங்களிலும் வெற்றிபெற்று ஆண்டவரில் உறுதியாய் நிலைத்து நிற்போம்.

அன்புள்ள தெய்வமே!

எல்லா வேண்டுதல்களையும்,மன்றாட்டுகளையும் உமது பாதத்தில் சமர்ப்பிக்கிறோம். நீர்தாமே அவைகளை ஏற்று எங்களை அலகையின் எல்லா சோதனையிலிருந்து மீட்டு காத்துக்கொள்ள வேண்டுமாய் உம்மிடத்தில் கெஞ்சி மன்றாடுகிறோம். நீர்தாமே பொறுப்பெடுத்து ஜெபத்தைக் கேட்டு பதில் அளித்து பாதுகாத்தருள வேண்டுமாக வேண்டிக்கொள்கிறோம்,எங்கள் தந்தையே!

ஆமென்! அல்லேலூயா!!.

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.