எல்லையற்ற கடவுளின் அன்பு

”தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்” என்கிற இந்த இறைவார்த்தை, கடவுள் எந்த அளவுக்கு இந்த உலகத்தை அன்பு செய்கிறார் என்பது நமக்குத் தெரியவருகிறது. கடவுள் யாரை அன்பு செய்தார்? இந்த உலகத்தை அன்பு செய்தார்.

உலகம் என்பது எதைக்குறிக்கிறது? ஒரு குறிப்பிட்ட நாட்டைக் குறிப்பிடவில்லை. ஒரு குறிப்பிட்ட மனிதரைக் குறிப்பிடவில்லை. மாறாக, ஒட்டுமொத்த மனிதகுலத்தை அது குறிப்பதாக இருக்கிறது. இந்த உலகத்தில் நல்லவர்களும் கெட்டவர்களும் இணைந்தே வாழ்கிறார்கள். கடவுள் நல்லவர்களை மட்டும் அன்பு செய்து, கெட்டவர்களை விலக்கிவைக்கவில்லை. அனைவரையும் அன்பு செய்கிறார். தன்னை நினைக்கிறவர்களை மட்டும் கடவுள் நினைக்கவில்லை. தன்னைப்பற்றிய அறியாதவர்கள், தன்னை ஒரு பொருட்டாக மதிக்காதவர்கள், தன்னை குறைகூறுகிறவர்கள் என அனைவரையும் கடவுள் அன்பு செய்கிறார். இதுதான் கடவுளின் பரந்துபட்ட அன்பு. இதுதான் முழுமையான அன்பு. இதுதான் நிலையான அன்பு.

கடவுளின் இந்த நிலையான முழுமையான அன்பை நாம் அனைவரும் உணர்வோம். அந்த அன்பில் நாம் இணைவோம். அந்த அன்பை நாம் உணர்கிறபோது, நம்மிலும், நமது வாழ்விலும் அளப்பரிய மாற்றம் ஏற்படுகிறது. நமது வாழ்வு மாற ஆரம்பிக்கிறது. அனைவரையும் நாம் ஏற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறோம். நமது எல்லையை விரிவுபடுத்த ஆரம்பிக்கிறோம். கடவுளின் பரந்துபட்ட அன்பை, நமது வாழ்விலும் நாம் செயல்படுத்துவோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.